இருந்தாளோ, யாரின் ஆசியுடன் தங்கள் வாழ்வைத் துவங்க வேண்டும் என நினைத்திருந்தாளோ அவர் இன்று இல்லையென்ற ஆற்றாமையில் மனம் புழுங்க, ரம்யாவுக்கு. இனி தினேஷின் நிலை என்ன, தனியாக அவன் இங்கு என்ன செய்வான் என்று யோசிக்க யோசிக்க மனதுக்கு வலியாக இருக்க, தன் வீட்டுக்குச் செல்லாமல், இனி அவனுடனேயே அவன் வீட்டிலேயே இருந்துவிடலாமா என்றெல்லாம் தோன்றியது ரம்யாவுக்கு. மாணவர்களின் கூட்டத்துடன் கூட்டமாக அவளும் சென்றாள், யாரிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. துக்க வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கிளம்ப வேண்டும் என்ற வழக்கத்தின் படி அவன் வகுப்பினர் வெளியேற ஆரம்பித்தனர். வெளியில் ஒரு பெஞ்சில் பார்க்கவே வாட்டமாக அமர்ந்திருந்த தினஷை அப்படியே அக்கணமே கட்டியணைத்துக் கதறியழத் தோன்றியது ரம்யாவுக்கு. அழுகையை விட அவனுக்குத் தேவை தைரியம். அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தாள். உனக்கு எப்பவுமே நான் இருக்கேன் என்றாள் கண்களால். அவனும் அதைப் புரிந்து கொண்டவன் போல் தலையை அசைக்க, நகர்ந்தாள்.
வீடு சேர்ந்ததும், அம்மா, “பின் வாசல் வழியா வா என்றார், டவல் நைட்டி ரெண்டையும் பாத்ரூம்ல போட்ருக்கேன். குளிச்சிட்டு வீட்டுக்குள்ளே வா! என்றபடி போய்விட்டார். அம்மா சொன்னதைச் செய்தவள் அப்படியே படுக்கையறையில் சென்று படுத்துவிட்டாள். சத்யாவின் குரல் கேட்கவும், உள்ளேயே இருந்துகொண்டு, அவளை அறைக்குள்ளே வரச்சொன்னாள். தினேஷின் அம்மா தவறியதையும் அவள் துக்கம் கேட்க சென்று வந்ததையும் சொன்னாள். சத்யாவிற்கும் கஷ்டமாக இருந்தது. ரம்யாவைத் தைரியமாக இருக்கச் சொல்லிவிட்டு அவளும் கிளம்பினாள்.
அவன் தாயாரின் மறைவுக்குப் பின் ஒரு வாரம் சென்றது. இன்னும் தினேஷ் கல்லூரிக்கு வரவில்லை. அவனின் வீட்டில் எந்நேரமும் உறவினர்கள் இருந்ததால், அவனால் ரம்யாவுக்குப் போன் கால் பண்ணவும் முடியவில்லை, ரம்யாவுக்கும் தயக்கம். ஒரு நாள் மாலை, துணிந்து ஒரு முடிவெடுத்தாள். கல்லூரிப் பேருந்தில் செல்லாமல், தினேஷின் ஊருக்குச் செல்லும் அரசுப் பேருந்து ஒன்றில் ஏறினாள். வழியெல்லாம் அவனைப் பார்த்தால் என்ன பேசுவது எப்படிப் பேசுவது என்றெல்லாம் யோசனை. ரம்யா என்ன தான் கிளம்பிவிட்டாலும், அவளுக்கு தினேஷின் வீடு இருக்கும் திக்கு கூடத் தெரியாது. எப்படியாவது விசாரித்துக் கொண்டு போய்விடலாம் என்ற தைரியத்தில் சென்றாள். தினேஷின் ஊர் வரவும், நிறுத்தத்தில் இறங்கினாள். எத்திசை போக என்ற விழித்தவளுக்கு, ஒருவர் அவளிடம் வந்து ஏம்மா நீ தினேஷ் பிரெண்டா என்ற கேள்வியைக் கேட்கவும் தேடாமல் வலிய வந்து உதவி கிடைத்த நிம்மதி. அவளிடம் கேள்வி கேட்டவர் தினேஷின் சொந்தக்காரர்களில் ஒருவரே . எனவே ரம்யாவை அவரே அவனின் வீட்டில் அழைத்து வந்து விட்டுவிட்டார்.