அங்கு வந்திருந்த இருவரை தனத்திற்கு அறிமுகப் படுத்தினார் நிக்கத், "இது செல்வம், அவன் மனைவி சுமதி, இவர்களை இங்கு வேலைக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். சுமதி, எல்லோருக்கும் சமையல் செய்து வீட்டை பராமரிப்பாள். செல்வம் வீட்டுக்கு வேண்டியதை வாங்கிப் போட்டு, காரை ஓட்டுவான், அஜயை பார்த்துகொள்ளும் பொறுப்பு செல்வத்தினுடையது" என்றார் நிக்கத்.
தனம் தன் மனதில் நம் மகன் அவ்வளவு சம்பதிக்கிரானா இத்தனை வேலை ஆள் தேவையா? என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில்,
"என்னம்மா தனம், என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய், நான் உன் அம்மா என்றிருக்கிறேன், நீ என்னிடம் பிரியமாய் இருக்கலாம், எதையும் கேட்க தயங்க வேண்டாம்" என்றார் நிக்கத்
"அதெல்லாம் ஒண்ணுமில்லை ஆண்டி."
“பார்த்தியா, என்னிடமே மறைக்கிற, நான் உன்னளவு படிக்காம இருக்கலாம், ஆனால் அனுபவசாலி. என்கிட்டே மறைக்காம, கேக்க நினைக்கறத கேளு.”
"சரி இப்ப இவ்வளவு வேலைக்கு ஆள் தேவையா? எப்படி இவங்களுக்கு சம்பளம் கொடுப்பது அதான் யோசிச்சேன்."
" அதான் அங்கிள் ஏற்கனவே சொன்னாரேம்மா, நம்ம அஜய் நிறைய மியுசிக் டைரக்டர்ஸ் கிட்ட பாடறான். அவனுக்கு சம்பளம் வருதுல்ல அதுல தான், இதை எல்லாம் செய்யறோம், இல்லேன்னா உன் மகன் எதையும் ப்ரீயா ஒத்துக்கமாட்டான், நீ ஏன்மா கவலைப் படறே?"
" அதுக்கில்லை ஆண்டி இனிமே நான் இங்கேதான் இருக்கபோறேன், நானே சமைச்சு நானே இவங்களை பார்த்துக்கறேன், அனாவசியமாக செலவு எதுக்கு, இனி என் சம்பளத்திலேயே செலவுகளை கூட பார்த்துக்கலாம், நம்ம அஜய் பணத்த அப்படியே சேர்த்து வைக்கலாம் அவனுக்கு மேல் படிப்புக்கு.." என்று தன் எண்ணங்களை
கூறினாள்.
"நீ வேலைக்கு போறவம்மா, நீ கஷ்டப் படவேண்டாம் எல்லாம் கணக்கு பண்ணித்தான் இவங்களை ஊருலேர்ந்து வர சொன்னேன். இப்ப திரும்பி அனுப்பிச்சா பாவம் இவங்க எங்கே போவாங்க சொல்லு, அதனால இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் உன் மண்டைய போட்டு உடைச்சுக்காதே,"
"நீங்க சொல்லறதும் சரி ஆண்டி , நான் வேலைக்கு போகச்சே இந்தக் குழந்தைகளுக்கு சாப்பாடெல்லாம் ஒழுங்கா கிடைக்கும்."
" பார்த்தியா உனக்கே இப்ப புரிஞ்சிருக்கு, சரி வா அஜய்க்கு கேக் வெட்டலாம் வா!" என்று அவளை கூட்டிக் கொண்டு வெளியே வந்தார் நிக்கத்.