“நிவேதிதா...ப்ளீஸ்...புரிஞ்சுக்கம்மா....அது அந்த ஸ்டேஜையெல்லாம் தாண்டிருச்சும்மா!....ஆரம்பத்திலிருந்தே முறையா ஊசியெல்லாம் போட்டிருந்தா அதுக்கு வெறியே பிடிச்சிருக்காது!...நீங்க அப்ப கோட்டை விட்டுட்டு...இப்ப வந்து பேசிக்கிட்டிருக்கீங்க!...போதும்...யாரும் என்கிட்ட இதுக்கு மேலே பேச வேண்டாம்!”
“டாடி...டாடி...ப்ளீஸ் டாடி!” கிட்டத்தட்ட அழுதே விட்டாள் நிவேதிதா.
“பாவம்ங்க...நம்ம நிவேதிதா!...சீஸரைக் குட்டியா இருந்தப்ப இருந்தே ஆசையா....பாசமா...தடவித் தடவி வளர்த்தவங்க அவ...” மகேஸ்வரி மகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தாள்.
தீனதயாளுவிடம் எந்தவித ரீயாக்ஷனும் இல்லை.
“அதுக்கு முதல்ல சாப்பாடு வெச்சிட்டு அப்புறம்தாங்க அவளே சாப்பிடுவா!...தூங்கும் போது கூட அதைத் தன்னோட அறைல...தன்னோட கட்டிலுக்கு கீழேயே படுக்க வெச்சுக்குவாங்க!....வேண்டாங்க...நீங்க அதைச் சுட்டுக் கொன்னீங்கன்னா...அதை அவளால தாங்க முடியாதுங்க!”
“த பாரு மகேஸ்வரி...அவ ஒண்ணும் சின்னப் பாப்பா இல்லை, அவளுக்கும் வயசு இருபதுக்கு மேலே ஆச்சு!...வாழ்க்கைல அயிரம் இருக்கும்...அதையெல்லாம் ஏத்துக்கற பக்குவம் அந்தந்த நேரத்துல...அந்தந்த சூழ்நிலைகள்ல...அது வந்திடும்!...அதே மாதிரி...நிவேதிதாவிற்கும் இதை ஏத்துக்கற பக்குவம் தானே வந்திடும்!...நீ கவலைப்படாதே!” மனைவியை தன் சாதூர்யமான பேச்சால் மடக்கி விட்ட தீனதயாள் தான் நினைத்தது போலவே அடுத்த அரை மணிநேரத்தில் சீஸரைத் தன் துப்பாக்கி குண்டுக்கு இரையாக்கி விட்டு காத்திருந்த கார்ப்பரேஷன் வண்டியில் அதை அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து அங்கிருந்தால் தாயும் மகளும் சேர்ந்து தன்னைத் திட்டித் திட்டியே கொன்று விடுவார்கள் என்பதையுணர்ந்து அவசர அவசரமாக வண்டியை ஸ்டார்ட் செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கே திரும்பினார்.
இரவு தாமதமாக வீடு திரும்பிய தீனதயாள், இறுகிய முகத்துடன் கன்னத்தில் கை வைத்தபடி அரையிருட்டில் அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்து,
“என்ன மகேஸ்வரி...லைட் கூடப் போடாம இருட்டுல உட்கார்ந்திட்டிருக்கே?...என்னாச்சு?...இன்னமும் அந்த நாய் என்கவுண்டர்ல இருந்து மீளலையா நீ?”
நிதானமாய்த் தலையைத் தூக்கி “பொசுக்”கென்று அழும் மனைவியைப் பார்த்து அதிர்ந்து போனார் “ஏய்...ஏன் அழறே?...என்னாச்சு?...நிவேதிதா எங்கே?”