தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 01 - பிந்து வினோத்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 1 – கதை சுருக்கம்
கணவன் மனோஜுடன் பதினைந்தாவது திருமண நாளை கொண்டாடும் மஞ்சு, மனோஜை முதல் முதல் சந்தித்த நாள் தொடங்கி நடந்தவற்றை மனதுக்குள் திரும்பிப் பார்க்கிறாள்.
மஞ்சுவும், அமுதாவும் நெருங்கிய தோழிகள். அமுதா வேலை செய்யும் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் மஞ்சுவும் சேர்கிறாள். அங்கே மேனேஜராக இருக்கும் மனோஜின் அறிமுகம் அவளுக்கு கிடைக்கிறது.
மஞ்சுவை பார்த்த உடனே காதல் வசப்படுகிறான் மனோஜ். மனோஜின் குடும்பத்தில், அவனின் அம்மா (நிர்மலா), அண்ணன் (ஷண்முகம்), அண்ணி (வினோதினி), தங்கை (ஜோதி) இருக்கிறார்கள். இளம் வயதிலேயே கணவனை இழந்து, தனி ஆளாக பிள்ளைகளை வளர்த்த நிர்மலா, ஜோதியின் திருமணத்திற்கு பின் மனோஜின் திருமணம் என்று திட்டமிடுகிறாள்.
பொதுவாக அம்மாவின் பேச்சை கேட்டு நடக்கும் மனோஜ், மஞ்சுவிற்கு திருமணம் பார்க்க தொடங்கி இருக்கும் செய்தி கேள்விப்பட்டு, தன் ஆசையை அம்மாவிடம் சொல்கிறான். மஞ்சு பக்கம் ட்ரெடிஷனல் அரேன்ஜ்ட் மேரேஜ் போலவும், தன குடும்பத்திற்கு காதல் திருமணம் போலவும் தோன்றும் விதத்தில் ‘கோல்மால்’ செய்து மஞ்சுவை கைப் பிடிக்கிறான் மனோஜ்.
மஞ்சுவும் மகிழ்ச்சியுடனே திருமண வாழ்வில் நுழைகிறாள். நிர்மலாவும், ஜோதியும் அவளை எதிரியாகவே பார்க்கிறார்கள். ஆனால், ஷண்முகம், வினோதினி அவளை முழு மனதுடன் குடும்பத்தில் ஒருத்தியாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
கணவன் மனைவிக்குள் ஏற்படும் சண்டை, சச்சரவு, பிரிவுகளை தாண்டி, தன் நல்ல மனதினால் நிர்மலாவின் கவனத்தை ஈர்க்கிறாள் மஞ்சு. ஆனால் அவளுக்கும் ஜோதிக்கும் நடுவே பனிப்போர் தொடர்ந்துக் கொண்டே போகிறது. இருந்தாலும் தன் நண்பன் கார்த்திக்குடன் ஜோதியின் திருமணம் நிச்சயமாக உதவுகிறாள் மஞ்சு. அவளின் இந்த செய்கை ஜோதியின் மனதையும் மாற்றுகிறது.
கணவன் வீட்டில் மஞ்சு ஓரளவிற்கு செட்டிலாகும் போது, மனோஜிற்கு ஆன்சைட் வாய்ப்பு கிடைக்கிறது. அதற்காக தன் வேலையை விட மனம் வராமல், ஒரு வருட விடுப்பு எடுத்து மனோஜுடன் அமெரிக்கா பயணமாகிறாள் மஞ்சு.
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2
அத்தியாயம் 1
“சின்ன அபார்ட்மென்ட் தான் மஞ்சு! அட்ஜஸ்ட் செய்துக்கோ...” என்ற மனோஜை கேலி பொதிந்த ஒரு பார்வை பார்த்து விட்டு, கிச்சனை நோட்டமிட்டாள் மஞ்சு.
“கிச்சன் சின்னது தான்... நமக்கு போதும்னு நினைச்சேன்...” என்று மனோஜ் வீட்டிற்கான ஆடியோ டூரை தொடரவும், மஞ்சு இப்போது சிரிப்புடன் அவனைப் பார்த்தாள்.