“அதெல்லாம் எதுக்கு பாட்டி உங்களுக்கு?...திரும்பத் திஎரும்ம எதுக்கு அதையே கேட்கறீங்க?...என்னோட சிநேகிதன் அவ்வளவுதான்” ‘வெடுக்’கென்று சொன்னான் தனசேகர்.
அப்போது அந்தக் கிழவி அடங்காமல், “கண்ணூ...அந்த ஊர்ல இருக்கற எல்லாரையும் எனக்குத் தெரியும்!...பொறந்தவன்...போனவன்...இருக்கறவன்...இல்லாமல் போனவன்..வெளியூருக்குப் பொழைக்கப் போனவன்...ன்னு ஒருத்தன் விடாமத் தெரியும்!...அதான் இவனோட அப்பனையும் தெரியுமா?ன்னு பார்க்கத்தான் கேட்டேன்”
பதில் சொல்லாமல் அவளிடமிருந்து மீள முடியாது, என்பதை தெளிவாய்ப் புரிந்து கொண்ட தனசேகர், “அது...வந்து... “கீழடித் தெரு”.... அங்கே...?” என்று யோசித்து விட்டு, “டேய் உங்கப்பா பேரு என்ன?” சன்னக் குரலில் முரளியிடம் கேட்டான்.
“இருளாண்டி” என்றான் அவன்.
“ஆமாம்!....கீழடித்தெரு...இருளாண்டியோட மகன்!...இவன் பேரு முரளி!” என்றான் தனசேகர்.
“இருளாண்டியா?....எந்த இருளாண்டி?....வீடு...வீடா அடப்பத்தை எடுத்துக்கிட்டுப் போய் முடி வெட்டி...சவரம் பண்ணி விடுவானே?..அந்த இருளாண்டி மவனா நீ?” கிழவி முகத்தை அருவருப்பாய் வைத்துக் கொண்டு கேட்க,
முரளியின் முகம் இருண்டது. “ஆ...மா....ம்” என்றான் தயக்கமாய்.
“இருளாண்டி இருக்கானா?...செத்துப் போயிட்டானா?” கிழவி கேட்டாள்.
“இல்லை ஆத்தா...மூணு வருஷத்துக்கு முன்னாடி மாரடைப்புல செத்துப் போயிட்டாரு”என்றான் தனசேகர்.
தலையை மேலும், கீழும் ஆட்டியபடியே யோசித்த கிழவி, “ஏம்ப்பா...உங்கப்பன் போன பொறவு நீ அந்தத் தொழிலை எடுத்துக்கலையா?” கேட்க,
“பாட்டி...இவன் படிச்சவன்...இப்ப ரைஸ் மில்லுல கணக்குப்பிள்ளையா இருக்கான்!...இவன் எதுக்கு அந்த வேலையை எடுக்க்ணும்?” நண்பனை விட்டுக் கொடுக்காமல் பேசினான் தனசேகர்.
“அப்படியா?....” என்ற கிழவி, ஒரு சிறிய யோசிப்பிற்குப் பின், “ஏம்பா...இருளாண்டி...நல்ல மனுஷனா...மரியாதை தெரிஞ்சவனா...இருந்தான்!...அவனுக்குப் பொறந்த நீ...இப்படி மரியாதை தெரியாதவனா இருக்கியேப்பா?” என்று சொல்ல,
ஒரு கணம் ஆடிப் போனான் முரளி.
தர்ம சங்கடமாகிப் போன தனசேகர், “ஆத்தா...நீங்க என்ன பேசறீங்க?...நான் இந்த வீட்டுக்கு மாப்பிள்ளையா வரப் போறவன்!..இவன் என்னோட நண்பன்...நீங்க எனக்கு குடுக்கற மரியாதையை இவனுக்கும் குடுக்கணும்!...” என்றான்.