“மாப்ளத் தம்பி...நீங்க சொல்றது வாஸ்தவம்தான்!...ஆனா அதுக்குன்னு ஒரு வரைமுறை இருக்கல்ல?...இன்ன வர்ணத்தைத்தான் உள்ளார விடணும்..இன்ன வர்ணத்தையெல்லாம் வெளிய வாசலிலேயே நிக்க வைக்கணும்!ன்னு...நம்ம பெரியவங்க சொல்லி வெச்சதெல்லாம் சும்மா வாய்ப் பேச்சுக்காக மட்டுமல்ல...எல்லாத்திலும் ஏதோ ஒரு அர்த்தமிருக்கு!....இதோ இந்த தம்பியோட அப்பனை நான் சின்ன பல வருஷத்துக்கு முன்னாடி உங்க ஊருக்கு வந்தப்ப பார்த்திருக்கேன்...என்னையும் என் புருஷனையும் ரோட்டுல பார்த்தா தோள்ல இருக்கற துண்டை எடுத்து ஒரு கக்கத்திலும், கால் கிடக்கற செருப்பைக் கழற்றி இன்னொரு கக்கத்திலும் வெச்சிட்டு...அப்படியே தெருவோரமா கூனிக் குறுகி ஒதுங்கிப் போவான்!...அப்படிப்பட்டவனுக்குப் பொறந்த இவன் என்னடான்னா...நம்ம வீட்டுக்குள்ளாரவே வந்து...நம்ம பண்ணை எதிர்த்தாப்புல உட்கார்ந்து பேசிட்டிருக்கான்!....ம்ஹும்...இதெல்லாம் நல்லதுக்கில்லை தம்பி” கிழவி இங்கிதமென்றால் என்ன வென்றே தெரியாமல் பேசிக் கொண்டே போனாள்.
ரத்தன் கொதித்த்து தனசேகருக்கு.
சட்டென்று எழுந்தான் முரளி, “இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்... “வெளில பைக் பக்கத்திலேயே நின்னுக்கறேன்”ன்னு...நீதான் கேட்காம வீட்டுக்குள்ளார கூட்டிட்டு வந்தே...இப்ப பாரு...எனக்குத் தேவையில்லாத அவமானம்” சொல்லிக் கொண்டே முரளி வெளியேறப் போக,
தன் பார்வையை ராமலிங்க பூபதி பக்கம் திருப்பிய தனசேகர், “மாமா...ஆத்தா சொன்னா சொல்லிட்டுப் போறாங்க...என்னோட நண்பனை உட்காரச் சொல்லி நீங்க சொல்லுங்க மாமா” என்றான்.
வீட்டுத்தலைவன் சொன்ன பிறகு அதை யாரும் மறுக்க முடியாது, என்று எண்ணிச் சொன்னான் தனசேகர்.
“அது...வந்து...ஆத்தா சொன்னதுல...என்ன மாப்பிள்ளை தப்பு?...கால காலமா நடந்திட்டு வர்ற ஒரு விஷயத்தை எப்படி தம்பி விட்டுட முடியும்?...பெரியவங்க சொல்றதுல அர்த்தமிருக்கும் தம்பி!”
“விருட்”டென்று தானும் எழுந்தான் தனசேகர்.
“மாமா...நாங்க ஒரு சின்ன சந்தோஷத்தை எதிர்பார்த்து...உங்க மகளுக்கு பத்திரிக்கை குடுக்க இங்க வந்தோம்!...ஆனா வந்த இடத்துல நல்ல மரியாதையைக் குடுத்திட்டீங்க!...ஆத்தா அந்தக் காலத்து மனுஷி...அவங்க அப்படித்தான் வர்ணம்...ஜாதி...ன்னு பேசிட்டிருப்பாங்க!...ஆனா நீங்க...இந்தக் காலத்து மனுஷன்...நீங்களும் அதே மாதிரிப் பேசறதுதான் எனக்கு சங்கடமாயிருக்கு!”