நொடில உன் மேல காதல் வசப்பட்டேன்னு எனக்குத்ட் தெரியல. பொண்ணுங்களுக்கு அப்பா தான் முதல் ஹீரோ இல்லையா, என்னோட அப்பாவின் புன்னகையின் சாயல் உன் முகத்தில எனக்குத் தெரியும், கீதா கிட்ட கேல்ஸி கேட்கன்னு வருவியே என் கிளாஸுக்கு, அப்போல்லாம் என்னையே அறியாமல் என்னோட கண்கள் உன்னை கவனிச்சிருக்கணும். எந்த நாள் உன் காதலை என்கிட்டே சொன்னியோ, அதில் இருந்து தான் எனக்கும் இந்த காதல் நோய் புடிச்சிருக்கணும். அப்புறம் அதிலிருந்து மீளவே முடியாமல், பார்க்கிற இடமெல்லாம் நீ, கேக்கிற திசையெல்லாம் உன்னோட குரல் தான், விடுற மூச்செல்லாம் உனக்காகத் தான்னு, அடிக்கடி கண்ணாடி பார்த்து அம்மாகிட்ட திட்டு வாங்கி, போன் ரீசிவர் காதோடு பிளாஸ்டர் பண்ணி, பலவித ஸ்டேஜ்ல, நோய் ரொம்ப முத்தி, இன்னிக்கு இதோ இங்கே உன்கிட்ட உன் தோளில் சாய்ந்துகிட்டு கதை பேசிட்டு இருக்கேன்! என்றாள் ரம்யா.
“இவ்ளோ நீளமாப் பேசியே வயிறு பசிக்குதுடா இப்போ!” என்றவளிடம், சரி சமையலைத் தொடங்குவோம், நான் டின்னர் சமைக்க உனக்கு எதாச்சும் ஹெல்ப் பண்றேன், நாம நைட்டுக்கு சாப்பிட சாதம் நான் பண்ணவா?” என்று தினேஷ் கேட்கவும், “ம்! சாதம் பண்ணிக்கலாம், பால் இன்னும் மிச்சம் இருக்கே, பால் சாதம் சாப்பிட்டுக்கலாமா?” ரம்யா கேட்க, “அச்சச்சோ, இன்னிக்கு பால் சாதமா, அதை சாப்பிட்டா நல்லா தூக்கம் வந்திருமே!” என்று குறும்பாக சொல்லிவிட்டு, அப்புறம் நைட்டுக்கு வேற பால், பழம்லாம் வேணுமே சினிமால மாதிரி, அதுக்கு என்ன பண்றது என்றான் சிரிப்புடன்!” “அடிக்கப் போறேண்டா உன்னை, இன்னிக்குப் பேசாமல் நிம்மதியாத் தூங்கலாம் செம்ம டயர்டா இருக்கு!” என்றாள். “ச்சே! ச்சே! நானும் விளையாட்டுக்குத் தான் சொன்னேன்! என்றவாறே அவளின் கன்னத்தில் கிள்ளினான். பிரச்சினைகள் எதுவும் முளைக்காமல் திருமணம் முடிந்த நிம்மதியில் இருவரும் இரவு உணவை சமைத்து சாப்பிட்டு விட்டு உறங்கினார்கள்.
அவர்கள் இருவரும் எதிர்பார்த்தும், குடும்பத்தில் யாரும் போன் பண்ணி பேசவில்லை. ரகு தான் போன் பண்ணினான், “உனக்குக் கல்யாணம் முடிஞ்சிருச்சுன்னு நேத்து அம்மாகிட்ட போன்ல சொன்னேன். அம்மா பதிலே பேசல, அப்பாகிட்ட கொடுத்தாங்க. அப்பா நீ சொன்னத சீரியசாவே எடுத்துக்கல, நீ அப்டில்லாம் செஞ்சுர மாட்டன்னு நம்பிக்கையா இருந்தேன்னு சொன்னாங்க. இனிமே அவ என் மகளே இல்ல. நீ மட்டும் தான் என் புள்ளைன்னு! சொல்லிட்டு கோபமா இருந்தாங்க. அப்பா மனசு மாறும் நீ கவலைப்படாத அக்கா! நான் உன்னையும் தினேஷ் மாமாவையும் அடிக்கடி வந்து சந்திக்கிறேன்!” என்று சொன்னான். இருவரின் குடும்பத்தில் அவன் ஒருவனாவது அவளைப் புரிந்துகொண்டது ரம்யாவிற்கு ஆறுதலாக இருந்தது.