தங்கள் வாழ்வு சம்பந்தமான முடிவுகளை யார் எடுத்தாலும் ஒன்றுதான் என்ற உணர்வு இருவரிடமும். ரம்யா சொல்வதைத் தான் நாம் கேட்கிறோம் என்று ஈகோவெல்லாம் தினேஷிடம் துளியும் கிடையாது. அவன் சொல்வது இது தான், “நீ பேசு, நான் கேட்டுப்பேன், நீ எழுது, நான் வாசிப்பேன், நீ சொல்லு, நான் செய்றேன்! இருவரும் ஒரே மாதிரி இருந்தால் அது நல்லாயிருக்காது, ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட் ஈச் அதர்!” இந்த வார்த்தைகளை கடைபிடித்தும் வந்தான். திருமணமான புதிதில் சில சண்டைகள் வருவது இயல்பு தான். அந்த சண்டைகளையும் ஒருவருக்கொருவர் இன்னும் புரிந்து கொள்ள கிடைத்த வாய்ப்பாக்கி இன்னும் அவர்களுக்கிடையில் இருந்த அன்பையே அதிகரித்தனர். அதுவுமில்லாமல், “உனக்கு நீ! எனக்கு நான்!” என்று நாம் மட்டும் தான்! என்ற நினைப்பு வருவதால், எந்த முறைப்பும் இன்றி சில மணித்துளிகளில் இருவரும் சமாதானம் ஆகிவிடுவார்கள். ரம்யாவும் தினேஷும் அந்த இரு குழந்தைகளையும் தாங்கள் வளர்ப்புப் பெற்றோராக இருக்க வீட்டிலும், ஹோமிலும் செய்ய வேண்டிய ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். அவர்களுக்கென உடைகள், பொம்மைகள், கதைப்புத்தகங்கள், சத்தான உணவுகள் என என்னென்ன தேவைப்படும் என்று யோசித்து வாங்கினார்கள். இருவருக்கும் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் அவசரம் இருந்தாலும், குழந்தைகளை எப்படிக் கவனிப்பது என்று அழகாகத் திட்டமிட்டனர். அஸ்வின், ப்ரீத்தி, அர்ஜூன், பிங்கி என்று முதலில் பெயர்களை முடிவு செய்து வைத்திருந்தனர். பின்னர் இருவருக்கும், நல்ல தமிழ்ப் பெயர்கள் வைக்கலாம் என்று தோன்றவே பெண்ணுக்கு இளவேனில் எனவும், பையனுக்கு இளங்கதிர் என்றும் பெயர்சூட்டினர். ரம்யாவுக்கு வீட்டில் இருந்தே பணிபுரிய அவளின் அலுவலகத்தில் இருந்து அனுமதி கிடைத்தது. அம்மா, அப்பாவாக இருக்கும் பொறுப்பு புதிதென்றாலும் தவறுகளைத் திருத்திக் கொண்டே கற்றுக் கொள்ளலாம் என்று துணிந்து விட்டதால், இரு குழந்தைகளையும் தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
அன்பையும், அரவணைப்பும், பாதுகாப்பும் கிடைத்த அந்த மழலைகள் வேனிலும், கதிரும் ரம்யா, தினேஷை தம் அம்மா, அப்பாவாக ஏற்றுக் கொண்டனர். வார்த்தைகளின்றி வந்த அந்த இரு மலர்களும் இன்று வசந்தம் வீசுமாறு அழகிய தமிழில் பேசவும் கற்றுக்கொண்டனர். வார்டனுக்கு ரம்யாவும், தினேஷும் அவர்களை சிறப்பாக வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. வேனிலையும், கதிரையும் சட்டபூர்வமான முறையில் தத்தெடுக்கத் தேவைப்பட்ட சில ஆவணங்களைத் தயார் செய்து கொண்டிருந்தனர். ஏழு மாதங்கள் ஓடின. ஒரு வெள்ளிகிழமை மாலையில், அந்த வார ஞாயிற்றுக் கிழமையில் தனது வீட்டில் இருவரும் தன்னை வந்து சந்திக்குமாறு தினேஷின் அண்ணன் ராஜேஷ் போன்