ரவீந்தர் உள்ளே வருவதைக் கண்டு, “அட்டே...வாங்க தம்பி...நீங்க கடை ஷேவிங் தானே?” கேட்டார்.
“இல்லைங்க....நான் கட்டிங்”
அடுத்த பத்தாவது நிமிடம் கஸ்தூரி அய்யாவின் ஷேவிங் முடிந்து விட, “நீங்க கிளம்புங்கய்யா..”என்றான் ரவீந்தர். “இல்லை தம்பி...நீங்களும் முடிச்சிட்டு வாங்க ரெண்டு பேரும் பேசிட்டே போவோம்!...உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கு” என்றார் அவர்.
“திடும்”மென அதிர்ந்தான். “ஆஹா...இவரு பொண்ணு கூட நான் ஷோவியலா பேசறதைத் தப்பா எடுத்துகிட்டு என்னைத் திட்டித் தீர்க்கப் போறாரா?”
சலூன் கடையிலிருந்து திரும்பி வரும் போது, “தம்பி...சுதாகர்ஜி உங்களைப் பற்றி ரொம்ப நல்லா சொல்லியிருக்கார் தம்பி!...நீங்க அவருக்கு நிறைய உதவிகள் செய்திருப்பதாகவும் சொன்னார் தம்பி!...அதனாலதான்...நானும் உங்க கிட்ட ஒரு உதவி கேட்கலாம்!னு இருக்கேன்...கேட்கலாமா தம்பி?” மிகவும் தயங்கித் தயங்கிக் கேட்டார்.
“இதிலென்ன்ங்க அய்யா இருக்கு?...தாராளமாய்க் கேளுங்க!...ஒருத்தருக்கொருத்தர் உதவி செஞ்சுக்கறதுக்காகத்தானுங்க அய்யா இந்த மனிதப் பிறவியே?” என்றான் ரவீந்தர்.
“வந்து...எனக்கு வயசு...எழுபத்தி அஞ்சு ஆச்சு”
“அதையெல்லாம் குறைக்க என்னால முடியாதுங்க அய்யா” சொல்லி விட்டுச் சிரித்தான் ரவீந்தர்.
அவரும் வாய் விட்டுச் சிரித்து விட்டு, “உடம்புல ஒண்ணு ரெண்டல்ல...ஏகப்பட்ட நோய்களும் இருக்கு!...எந்த நேரத்துல நான் போயிடுவேனோ?ன்னு பயமாயிருக்கு” சட்டென்று அவர் குரல் பிசிறடித்தது.
“அய்யய்ய...அப்படிச் சொல்லாதீங்கய்யா...உங்க நல்ல மனசுக்கு நீங்க நூறு வயசு நல்லா இருப்பீங்கய்யா” என்றான் ரவீந்தர்.
வறட்சியாய் சிரித்த கஸ்தூரி அய்யா, “தம்பி...அப்படியே “பொசுக்”குன்னு எனக்கு ஏதாச்சும் ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிட்டா...என் மக வத்சலாவுக்கு யாரு தம்பி இருக்காங்க?” சோகமாய்ச் சொன்னார்.
“திக்”கென்றானது ரவீந்தருக்கு. “ஆஹா...இவரு பொன்ணு கூட நான் அன்னியோன்யமா பழகறதை வேற மாதிரி நெனச்சு எங்க ரெண்டு பேருக்கும் முடிச்சு போட்டுட நினைக்கறாரோ பெரியவர்?”
“அதனால...நான் போய்ச் சேருவதற்கு முன்னாடி என் மகளுக்கு இன்னொரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்க்கணும்!னு ஆசைப்படறேன் தம்பி”