தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 14 - முகில் தினகரன்
இப்பூவுலகில் எத்தனையோ நிகழ்வுகள் மகிழ்ச்சியின் ஊஞ்சல்களாய், துயரங்களின் தொட்டில்களாய், நிகழ்ந்து கொண்டேயிருந்த போதிலும், புவிக் கண்டத்தின் ஒரு புறத்தில் வெள்ளப் பெருக்கும், மறு புறத்தில் வறட்சியும் நிலைப்பாட்டிலிருந்த போதிலும், அரசியல், ஆன்மீகம், விஞ்ஞானம், பொருளாதாரம், போன்ற பல கோட்பாடுகளில் மாற்றங்கள் இடம் பெற்றுக் கொண்டேயிருந்த போதிலும்,
காலம் மட்டும் எந்தவொரு இடர்பாடுமின்றி தன் பாதையில் எவ்வித மாற்றமுமின்றி ஓடிக் கொண்டேயிருந்தது. காலத்திற்குப் பேச முடியாதுதான், ஆனால் அந்தக் காலம்தான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றது.
கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து போயிருந்தது ஆறு மாதங்கள்.
இந்த ஆறு மாதத்தில், தன் முழு நேரத்தையும் முரளி மற்றும் அவன் குடும்பத்தாரைக் கண்டு பிடிக்கும் முயற்சியிலேயே செலவழித்துக் கொண்டிருந்தான் தனசேகர். போகாத ஊரில்லை, தேடாத தெருவில்லை, விசாரிக்காத ஆளில்லை.
“டேய் சேகர்...ஊரே கை கொட்டிச் சிரிக்குதுடா!...ஒரு கீழ்சாதிப் பையனுக்காக...தாலி கட்டிய பொண்டாட்டியையே தள்ளி வைத்திருக்கும் உயர்சாதிக்காரனை கேவலமாய்ப் பேசுதுடா” சுந்தரி கண் கலங்கிச் சொன்னாள்.
“தாராளமாய்ச் சிரிக்கட்டும்...கேவலமாய்ப் பேசட்டும்...அதுக்காக என் நண்பனை நான் தேடாமல் இருக்க முடியுமா?...தேடுவேன்!...தேடிக் கொண்டேயிருப்பேன்!...மாசக்கணக்கில் ஆனாலும் சரி...வருஷக் கணக்கில் ஆனாலும் சரி!...உங்களுக்கு குடும்பமும், சம்சாரமும் பெரிசு...ஆனா எனக்கு நட்பு மட்டுமே பெரிசு!” என்றான் தனசேகர்.
“டேய்...சும்மா அர்த்தமில்லாமல் பேசாதடா...இப்ப எல்லோருமே இறங்கி வந்திட்டாங்கடா... சம்மந்தி வீட்டுல கூட, “மாப்பிள்ளை அந்தப் பையன் கூட முன்னைப் போலவே பேசட்டும்...பழகட்டும்...ஏன் எங்க வீட்டுக்கே வேணாலும் கூட்டிட்டு வரட்டும்”ன்னு எல்லோருமே ஒத்துக்கிட்டாங்கடா” என்றாள் சுந்தரி.
“அம்மா...அதெல்லாம் வெறும் வாய் வார்த்தைகள்...அப்படியெல்லாம் சொன்னால் நான் அவங்க மகளை இங்கே கூட்டிக்குவேன்!னு நெனச்சு பேசறாங்க!...அதை நம்பி நான் அவங்க மகளை இங்க வரவழைச்சேன்னா...நாளைக்கு முரளி வந்ததும் அப்படியே பல்டி அடிச்சிடுவாங்க!...பழைய மாதிரி அவனைக் காயப்ப்டுத்திப் பேசுவாங்க!...மொதல்ல முரளி கிடைக்கட்டும்...அப்புறம் பார்க்கலாம்” என்றான் ஸ்திரமாய்.
****
கோயமுத்தூர்.