மெல்லக் கீழிறங்க, அவள் பார்வையில் இன்னொன்றும் பட்டது.
சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கோகுலின் பெரிய போட்டோ மாலையிடப்பட்டு, அதன் கீழே ஒரு சின்ன விளக்கும் எரிந்து கொண்டிருந்தது.
“என் மகன் கோகுல் இறந்தே விட்டானா?....”
“அப்படியென்றால் இங்கு வந்திருப்பது கோகுல் இல்லையா?”
“ஆனால் கோகுலைப் போலவே இருக்கிறானே?”
“ஏன் எனக்கு இப்ப அழுகை வரலை?....ஒருவேளை நான் ஏற்கனவே நிறைய அழுது விட்டேனா?...அதனால் எனக்கு இப்ப அழுகை வரலையா?”
தானே கேள்வியைக் கேட்டு, தானே பதிலையும் சொல்லிக் கொண்ட ஜெகதாம்பாளிற்கு, யாரிடமாவது பேச வேண்டும், தன் எண்ண ஓட்டங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் போலிருந்தது.
“என்னங்க முதலாளியம்மா...சாப்பிட்டாச்சா?...மாத்திரையெல்லாம் போட்டுக்கிட்டாச்சா?” கேட்டபடியே உள்ளே வந்தாள் முரளியின் தாயார் ராக்கம்மா.
“ஆச்சும்மா....! ஆமாம் நீ சாப்பிட்டியா?” திருப்பிக் கேட்டாள் ஜெகதாம்பாள்.
“ம்ம்...இப்பத்தான் முரளியை டிரான்ஸ்போர்ட் ஆபீஸுக்கு அனுப்பிட்டு...நானும் சாப்பிட்டுட்டு வந்தேன்” என்ற ராக்கம்மா மெல்ல நடந்து ஜெகதாம்பாளின் காலருகே சென்று, தரையில் அமர,
“அய்யய்ய...ஏன் கீழே உட்கார்றே?...எந்திரிச்சு சோபாவுல உட்காரு” என்றாள் ஜெகதாம்பாள்.
“பரவாயில்லைங்கம்மா.....இங்க உட்கார்ந்தால்தான் உங்களுக்கு கால் அமுக்கி விட தோதாயிருக்கும்” என்றவாறே ஜெகதாம்பாளின் கால்களை இதமாய்ப் பிடித்து விட்டாள் ராக்கம்மா.
“ராக்கம்மா...என் மகன் கோகுல் இறந்திட்டான் தெரியுமா உனக்கு?” மாலையிடப்பட்டிருந்த போட்டோவைப் பார்த்தவாறே சொன்னாள் ஜெகதாம்பாள்.
“ம்...அய்யா சொன்னாரு”
“எனக்கு அவன் இறந்து போன மாதிரியே தெரியலை!...என் கூட இருக்கற மாதிரியே தோணுது”
“அது உங்க தாய்ப்பாசம்”
“முரளியைப் பார்த்ததும் என் மகன் கோகுல்தான் திரும்பி வந்திட்டான்!னு நெனைச்சேன்!...ஆனா....இந்தப் போட்டோவையும்..இதோ இந்தப் பேப்பர்ல போட்டிருக்கற கண்ணீர் அஞ்சலி செய்திகளையும் பார்த்த பிறகுதான் புரியுது!...அவன் உண்மையிலேயே இறந்து போயிட்டான்!னு” என்றாள் ஜெகதாம்பாள் பரிதாபமாய்.
“அம்மா...சில காயங்கள் மருந்தால் சரியாகும்!...ஆனா சில காயங்கள் மறந்தால்தான் சரியாகும்”