இவங்க ரெண்டு பேருக்கும் இருக்கற யதார்த்தமான...பெரும் போக்கான...நல்ல மனசு ஏன் என்னைப் பெத்தவங்களுக்கும்....எனக்குப் பொண்ணு குடுதவங்களுக்கும் இல்லை?”
“என்னப்பா...அமைதியா நின்னுட்டே?” தனசேகரைப் பார்த்துக் கேட்டார் தங்கவேலு.
“ஒண்ணுமில்லை சார்” என்றவன், “சார்...முரளி?” என்று கேட்க,
“தம்பி..அவங்க குடும்பம் இங்க இல்லை!...எங்க முதலாளி வீட்டு அவுட்ஹவுஸ்ல இருக்காங்க!...மதியத்துக்கு மேலே நான் உன்னை அங்க கூட்டிட்டுப் போறேன்” என்றார் தங்கவேலு.
“சரிங்க” என்றான் தனசேகர்.
அன்று மதிய உணவுக்குப் பின், லாரியிலிருந்து இறக்கிய தனசேகரின் பைக்கிலேயே இருவரும் கிளம்பினர்.
டிரான்ஸ்போர்ட் முதலாளி வீட்டு அவுட்ஹவுஸின் கதவை நாசுக்காக தங்கவேலு தட்ட, முரளியின் தாய் ராக்கம்மா வந்து கதவைத் திறந்தாள். தங்கவேலுவைப் பார்த்ததும், “வாங்கண்ணே?” என்றவள் அவர் பின்னால் நின்றிருந்த தனசேகரைப் பார்த்ததும், லேசாய் அச்சமுற்றாள்.
“நீ...நீ...பொன்னுரங்கம் அய்யா மகன்தானே?”
“ஆமாம் அம்மா...உங்க மகன் முரளியோட நண்பன்” அழுத்தமாய்ச் சொன்னான் தனசேகர்.
“நீ எதுக்கு இங்க வந்தே?...அந்த ஊரிலிருந்து உன்னைப் பெத்தவங்க...துரத்தியடிச்சாங்க!...அதனால இங்க வந்தோம்!...இப்ப இங்கிருந்து துரத்தியடிக்க நீ வந்திருக்கியா?” கோபமாய்க் கேட்டாள் ராக்கம்மா.