“அந்த அன்பு தோல்வி அடையும் போதுதான் அதைத் தாங்க முடியாம அவன் அன்னிக்கு கத்தியை எடுத்திட்டான்!...அடிப்படையில் அவன் ரொம்பவே நல்ல மனசுக்காரனாம்” என்றான் தனசேகர்.
“யார் சொன்னாங்க அப்படின்னு?”
“என் மனைவி மல்லிகாவே சொன்னாள்....”
“ம்ம்ம்...நேத்திக்கு அவன் கூடப் பேசிப் பழகினதுக்குப் பிறகு...என் மனசும் அப்படித்தான் சொல்லிச்சு!... “அவன் நல்லவன்!னு” என்றான் முரளி.
“எல்லாத்துக்கும் மேலே...அன்னிக்கொரு நாள் அவன் என் அத்தை வீட்டிற்கு வந்திருந்தான்!...எதுக்கு தெரியுமா?...தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்க...மன்னிப்புக் கேட்டதோட போகலை...அவங்க எல்லோர் மனசையும் நெகிழ வைக்கற மாதிரி ஒரு விஷயத்தையும் சொல்லிட்டுப் போயிருக்கான்!” தனசேகர் சொல்லி விட்டு நிறுத்த,
“என்ன?...என்ன சொல்லிட்டுப் போனான்?”
“போலீஸ்காரங்க... “தனசேகருக்கு ரத்தம் குடுத்தா...உன் மேல் கேஸே வராமல் பண்ணிக்கலாம்!”னு சொன்னதுக்காக...அவன் ரத்தம் குடுக்கலையாம்!...தனக்குக் கிடைக்காத தன் முறைப் பெண்ணோட தாலியைக் காப்பாத்தணும்! என்பதற்காகத்தான் ரத்தம் குடுத்தானாம்!...பொதுவா...அவன் இட்த்துல வேற யாராவது இருந்திருந்தா... “தனக்குக் கிடைக்காத ஒருத்தி வேறொருத்தன் கூட நல்லா வாழக் கூடாது”ன்னுதான் நினைப்பாங்க!...ஆனா இவன்...வேற மாதிரி நினைச்சிருக்கான்!” நெகிழ்ச்சியோடு சொன்னான் தனசேகர்.
அதைக் கேட்டு முரளியும் நெகிழ்ந்து போனான்.
*****