தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 32 - முகில் தினகரன்
அடுத்த பத்தாவது நிமிடம் தனசேகரின் பைக் சத்தம் வாசலில் கேட்டது.
“விடு...விடு”வென்று வீட்டிற்குள் வந்து ஹாலில் அமர்ந்திருந்த அனைவரையும் பார்த்து சம்ம்பிரதாயமாக்ப் புன்னகைத்து விட்டு, நித்யாவைப் பார்த்து, நெற்றி சுருக்கி விட்டு, நேரே தங்கவேலுவின் அருகில் சென்று, “என்னண்ணே?...எதுக்கு என்னைய அவசரமாய் வரச் சொன்னீங்க?...ஏதாச்சும் பிரச்சினையா?” சன்னக் குரலில் கேட்டான்.
“எல்லாம் நல்ல பிரச்சினைதான்!” என்ற தங்கவேலு, முதலில் சொக்குவுக்கும் வசந்திக்கும் கல்யாணம் என்கிற விஷயத்தைச் சொன்னார்.
“ரொம்ப சந்தோஷம்!...”என்றான் அவன் வசந்தியையும், சொக்குவையும் மாறி மாறிப் பார்த்து,
“அடுத்தது...அதே முகூர்த்தத்துல உன்னோட சிநேகிதன் முரளிக்கு கல்யாணம்” என்றார்.
“ஆஹா...இது எப்ப முடிவாச்சு?...எனக்குச் சொல்லவேயில்லையே? கோபமாய் முரளியைப் பார்த்தான் தனசேகர்.
“அவனுக்கே இப்பத்தான் தெரியும்!” என்றவர் மறுபடியும் அந்த நித்யாவின் கதையை தனசேகரிடம் சொல்ல,
“ஒண்ணும் பிரச்சினையில்ல!...ரெண்டு பேரும் மேஜர்தானே?...இவங்க கல்யானத்தை...நாம தாராளமாய்ப் பண்ணிடலாம்!...அப்புறம் போலீஸ் பிரச்சினை..அது இதுன்னு வந்தா பார்த்துக்கலாம்!” என்றான் தனசேகர்.
ஞாயிற்றுக் கிழமை நடக்கப் போகும் இரட்டைக் கல்யாணத்தைப் பற்றி எல்லோரும் பேசி மகிழ்ந்து கொண்டிருக்க,
விதி பரண் மேல் அமர்ந்து அவர்களை வினோதமாய்ப் பார்த்தது.
****