“ஒரு நிமிஷன் இருங்க” என்று சொல்லி தங்கவேலுவின் மொபைல் நெம்பருக்கு கால் செய்தார்.
நீண்ட நேரம் ரிங் ஆகியும், தங்கவேலு எடுக்காததால், “எடுக்க மாட்டேங்கறாரே?” என்றார்.
“எடுக்க மாட்டான்...எப்படி எடுப்பான்...பொட்டப் புள்ளையைக் கடத்திட்டுப் போனவன் போனை எடுப்பானா?” கூவினான் கூட்டத்தில் ஒருவன்.
தன் டிரான்ஸ்போர்ட் ஆபீஸின் செக்யூரிட்டிக்கு போன் செய்து விசாரித்தார் சிங்கமுத்து.
“ஆமாங்க அய்யா...ஒரு நாலஞ்சு நாளைக்கு முன்னாடி...அவரைத் தேடி ஒல்லியா ஒரு பொண்ணு இங்க வந்திச்சு!...அழுதிச்சு...அப்புறம் அவர் அந்தப் பொண்ணை தெருமுனையிலிருந்து தன்னோட லாரில ஏத்திக்கிட்டுப் போனார்...அவ்வளவுதான் எனக்குத் தெரியும்” என்றான் அவன்.
பெரும் குழப்பத்திற்கு ஆளானார் சிங்கமுத்து.
“இந்தக் கூட்டத்துல அந்தப் பொண்ணோட அப்பா யார்?” சிங்கமுத்து கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார்.
ஒல்லியாய் ஒருவன் முன் வந்தான். “நாந்தான்...முருகன்”
“உங்க பொண்ணுக்கு...காதல் விவகாரம்...ஏதாச்சும்...”இழுத்தார் சிங்கமுத்து.
“அது...ஆமாம்...”என்று ஆரம்பித்த அந்த மனிதர், பின்னர் தன் பேச்சை மாற்றிக் கொண்டு, “இல்லை...அப்படியெல்லாம் எதுவும் இல்லை” என்றார். பொய் கலந்த வார்த்தைகள் தடுமாறிக் கொண்டே வெளியே வந்தன.
அதைப் புரிந்து கொண்ட சிங்கமுத்து, “ம்ம்ம்...உங்க பொண்ணுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணியிருக்கீங்களா?” கேட்டார்.