கோகுலுக்குத் தர வேண்டிய பணத்தை இவன் கிட்ட குடுத்திருக்கு...இவன் அதை வாங்காம...அந்தப் பொண்ணை என்கிட்ட கூட்டிட்டு வந்தான்!...அப்பத்தான் இந்தப் பொண்ணை நான் பார்த்திருக்கேன்” என்றார் சிங்கமுத்து.
“ஓ.கே....இப்ப புரிஞ்சு போச்சு!...அந்தப் பையன் பேர் என்ன சொன்னீங்க?” இன்ஸ்பெக்டர் சிங்கமுத்துவிடம் மறுபடியும் கேட்டார்.
“முரளி”
“கரெக்ட்!...அந்தப் பையன்தான் இந்தப் பொண்ணோட லவ்வர்!...அவனுக்காகத்தான் உங்க டிரைவர் அவளைக் கூட்டிட்டுப் போயிருக்கார்!...ஸோ...அந்த முரளியோட சொந்த ஊருக்கு போனா...அந்தப் பெண்ணைப் பிடிக்கலாம்!...சொல்லுங்க...அந்தப் பையனோட சொந்த ஊர் எது?”
சிங்கமுத்து சொல்ல,
“உங்க ஒத்துழைப்பிற்கு நன்றி”
சொல்லியபடியே எழுந்தார் இன்ஸ்பெக்டர்.
அவர்கள் எல்லோரும் சென்றபின், சிங்கமுத்துவின் மொபைலுக்கு கால் வந்தது. எடுத்துப் பார்த்தார். முரளிதான் கூப்பிட்டிருந்தான்.
“ஹலோ...அப்பா” என்று எடுத்த எடுப்பில் அவன் சொல்ல, நெகிழ்ந்து போனார் சிங்கமுத்து. அவருக்கு இறந்து போன தன் மகனுடன் பேசுவது போன்ற ஒரு உணர்வே ஏற்பட்டது.
“சொல்லு முரளி” என்றார் தழுதழுத்த குரலில்.
“அப்பா...நாளைக்கு,...ஞாயிற்றுக்கிழமை...எனக்குக் கல்யாணம்!...தப்பா நினைக்காதீங்க!...நேர்ல வந்து கூப்பிட முடியாத சூழ்நிலை!...நீங்களும்...அம்மாவும் கண்டிப்பா வரணும்!” என்று கெஞ்சலாய்க் கேட்டான் முரளி.