தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 01 - யாஷ்
“ஆதி, ஆதித்யா எழுந்திரு, எழுந்திரு!”
குளித்து முடித்து வந்த சான்வி அம்மா அமுல்யா குரல் கேட்டு எட்டிப் பார்த்தாள்.
“எதுக்கும்மா தம்பியை தொல்லை செய்துட்டு இருக்கீங்க?”
“தொல்லையா? மணி எட்டாகுது சான்வி. எண்ணெய் காலி ஆயிடுச்சு. எல்லாத்துக்கும் உங்க அப்பாவையே போக சொல்ல முடியுமா? இவன் காலேஜ் முடிச்சுட்டு வெட்டியா தானே சுத்திட்டு இருக்கான். இந்த மாதிரி சின்ன உதவியாவது செஞ்சா என்ன?”
“அவன் வெட்டியா இல்லையே அம்மா. அவனோட பிரென்ட் கூட சேர்ந்து புது சாப்ட்வேர் செய்துட்டு இருக்கான்.”
“அவன் அதை செய்யலைன்னு யார் அழுதது? அவனவன் மூணு வருஷம் காலேஜ் படிச்சுட்டு பத்தாயிரம் பதினைஞ்சாயிரம்ன்னு சம்பாதிக்கிறான். இவனுக்கு அவ்வளவு பணம் செலவு செஞ்சு நாலு வருஷம் கம்ப்யூட்டர் சைன்ஸ் எஞ்ஜினியரிங் படிக்க வச்சு என்ன பிரயோஜனம்? தண்டத்துக்கு இருக்கான்.”
கதவை திறந்து அறையில் இருந்து வெளிப்பட்டான் ஆதித்யா.
“எதுக்கும்மா காலையில அக்கா டைமை வேஸ்ட் செய்றீங்க? உங்களுக்கு என்ன வாங்கனும்னு சொல்லுங்க நான் வாங்கிட்டு வரேன்.”
தூக்க கலக்கத்துடன் சொன்னவனிடம் தனக்கு வேண்டிய பொருட்களின் பட்டியலை சொல்லி பணமும் கொடுத்தாள் அமுல்யா.
அம்மா போனதும் அக்காவை பார்த்து சிரித்தான் ஆதித்யா.
“நைட் எப்போ வந்த ஆதி? பத்தரை மணிக்கு பார்த்தப்போ நீ இல்லை?” சான்வியின் கேள்வியில் அக்கறை நிறைந்திருந்தது.