தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 06 - யாஷ்
ஆதித்யாவிற்கு சான்வியின் குரலில் இருந்த சந்தேகம் தெளிவாக புரிந்தது. அதற்கான காரணத்தையும் அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது. சான்விக்கு விபரங்களை சொல்லி விட வேண்டும் என்று ஆர்வத்துடன் நினைத்தான்.
நினைக்க மட்டும் தான் செய்தான்!
அவன் பேச வாய் அசைப்பதற்கு முன்பே, அக்ஷரா கிட்டத்தட்ட் பாதி கதையை சொல்லி முடித்திருந்தாள்!
”ஹலோ அக்கா! என் பேரு அக்ஷரா. நானும் டெக் குளோபல் காம்பெடிஷன்க்காக வந்திருக்கேன். என்னோட வந்தவங்க யாருக்கும் என்னைப் பிடிக்கலை. சும்மா என்னை வச்சு கலாட்டா செய்துட்டு இருந்தாங்க. ஆதி தான் எனக்கு சப்போர்ட் செய்தான். ஹீ இஸ் அ ஜென்டில் மேன்! நானும் ஆதியும் ஒரு டீமா இந்த காம்பெடிஷன்ல கலந்துக்கலாம்னு இருக்கோம். எங்க டீமை ரெஜிஸ்டர் செய்ய போறோம். நீங்க வாழ்த்து சொன்னா தான் ஆதிக்கு லக் அடிக்குமாம். அது தான் உடனே என் நம்பர்ல இருந்தே போன் போட சொல்லி மொபைல் கொடுத்தேன். சீக்கிரமா எங்க டீமுக்கு விஷ் செய்ங்க அக்கா. நான் இதுவரைக்கும் எந்த காம்பெடிஷன்லேயும் கலந்துக்கிட்டதே இல்லை. அதும் டீமா என்னை யாரும் சேர்த்துக் கிட்டதே கிடையாது. ஓவர் எக்சைடடா இருக்கேன். நிறைய பேசுறேனோ???”
சான்வி புன்னகை நிறைந்த முகத்துடன் இல்லை என தலையை ஆட்டினாள். அவளின் சிரிப்பே அவள் சொல்வதற்கு எதிர்மறையான பொருளைக் கொடுத்தது.
“நீங்க சிரிக்குறதை பார்த்தா நிறைய பேசுறேன்னு புரியுது. சாரிக்கா, நான் வாயை திறந்தா மூடவே மாட்டேன். நீங்க ஆதி கிட்ட பேசுங்க. எங்க இரண்டு பேருக்கும் விஷ் செய்ங்க. ப்ளீஸ் க்கா!”
“உங்க இரண்டு பேருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். உங்க பெஸ்ட் கொடுங்க, வெற்றி உங்களுக்கு தான்! அக்ஷரா, என் தம்பியை கொஞ்சம் பார்த்துக்கோம்மா, அவனுக்கு ஊரும் புதுசு, அங்கே தனியா வேற இருக்கான்.”