உண்மை இப்படி இருக்க தேன் எதனால் மாற்றி பொய் சொல்கிறான் என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் அபினவிற்கு எழுந்தது! ஆவலுடன் நடப்பதை கவனித்தான்.
முத்துக்குமார் தன்னுடைய அப்பாவின் எச்சரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை!
"இல்லைப்பா...என்னால உங்களுக்கும் அம்மாக்கும் ஏற்பட்ட கஷ்டம் போதும்... இதுக்கு மேலேயும் உங்களை அலைகழிக்க விரும்பலை...” என்ற முத்துக்குமார் தென்றல்வாணன் பக்கம் திரும்பினான்.
இன்ஸ்பெக்டரை நேராக ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் முன்பு அமர்ந்திருந்த இடத்தில் வந்து அமர்ந்தான்.
“இன்ஸ்பெக்டர், நான் தான் இந்திராவை கொலை செய்தேன்... என் குற்றத்தை நான் ஒத்துக்குறேன்.
இந்திரா மேல நான் உயிரையே வச்சிருந்தேன்... அவளுக்கும் என் மேல அன்பிருந்தது ஆனால் ரொம்ப அதிகபடியான அன்பு... எப்போ பாரு அம்மா கூட பேசாதீங்க, அப்பா கூட போகாதீங்கன்னு ஒரே டார்ச்சர். என் தங்கை மேகலைக்கு உதவி செய்ய கூட என்னை அவள் விடலை... அம்மாக்கு உடம்பு சரி இல்லைன்னு நான் போய் பார்க்க போனதற்காக இரண்டு வாரமா சண்டை மேல சண்டை போட்டு என்னை கொடுமை படுத்திட்டா... நான் அம்மா அப்பா கூட பேசுறதை நிறுத்தா விட்டால் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததா கோர்ட்டில கேஸ் போட்டு எங்க மூணு பேரையும் ஜெயில்ல அடைச்சிடுவேன்னு சொல்லி புதுசா மிரட்ட ஆரம்பிச்சா! என்னால அதுக்கு மேல தாங்க முடியலை, சார்! அது தான் ப்ளான் செய்தேன்...
அவளுக்கு பிடிச்ச மாதிரி நடப்பதா காட்டிக்கிட்டேன்... அன்னைக்கு காலையிலே, அவளுக்கு சர்ப்ரைஸ் தரேன்னு சொல்லி கண்ணை கட்டி உட்கார சொல்லிட்டு, அவ கையையும் கட்டினேன்... நான் ஏதோ கிப்ட் தரப் போறேன்னு சந்தோஷமா காதிருந்தவளின் கழுத்தை வெட்டிக் கொன்னேன்! நான் தான் கொன்னேன்... அவள் துடி துடிச்சு சாகுறதை பார்த்தேன்..."
ஆக்ரோஷமாக சொல்லி வந்த முத்துக்குமார், திடீரென்று உடைந்துப் போய் அழ ஆரம்பித்தான்.