தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 33 - பிந்து வினோத்
மஞ்சு கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவள் விரும்பாமலே பக்கத்து அறையில் இருந்து வந்த சத்தம் அவளின் காதில் விழுந்தது. மனோஜிடம் கேள்வி கேட்கப் படுவதையும், அவன் அதற்கு வேண்டா வெறுப்பாக பதில் சொல்வதும் புரிந்தது.
கேள்வி கேட்கும் நிலையில் இருந்து பதில் சொல்லும் நிலைக்கு மனோஜ் மாறி இருப்பது அவனுக்கு மட்டுமல்ல மஞ்சுவிற்கும் கூட பிடிக்கத் தான் இல்லை!
அவள் அவனை சந்தித்த முதல் நாளில் இருந்தே கம்பீரமான மேனேஜராக, நேர்மையான ஒரு ‘டீம் ப்ளேயர்’ ஆக தான் இருந்திருக்கிறான்! அவனை இந்த நிலைக்கு மாற்றியவர்களை என்ன என்று சொல்வது. ஒரு நிறுவனத்தின் வெற்றியில் ஒவ்வொரு எம்ப்ளாயீக்கும் எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அதே அளவு ஒவ்வொரு மேனேஜர் தன் கீழே பணிபுரிபவர்களை நடத்துவதிலும் இருக்கிறது! ஏன் அவளே கௌரவ் காரணமாக தானே முதல் முதல் வேலையை ராஜினாமா செய்வதுப் பற்றி யோசிக்கவே செய்தாள்! ஈகோ, பாலிட்டிக்ஸ், முதுகில் குத்துவது என அனைத்தும் இல்லாத இடமே இல்லை போல இருக்கிறது!!!
மஞ்சு தன் சொந்த யோசனையில் ஆழ்ந்திருக்க, மனோஜின் போன் மீட்டிங் நிறைவுக்கு வந்தது.
போனை கீழே வைத்தானோ இல்லையோ, “ஷிட்! ஷிட்! ஷிட்!” என்று அவன் பல்லைக் கடித்துக் கொண்டு சொல்லிக் கொண்டிருந்தான்!
மஞ்சு மனோஜுடன் பேசுவது இல்லை! ஆனாலும் அவனின் தற்போதைய மனநிலை புரிந்ததால் சும்மாவும் இருக்க முடியவில்லை!
மனோஜ் இருந்த அறைக்கு சென்றாள்!
கூண்டில் அடைப்பட்டிருக்கும் புலியைப் போல சீற்றத்துடன் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்தவன் மஞ்சு வந்ததும் நின்று அவளைப் பார்த்தான்.