“நீ இப்படி செய்வன்னு நான் நினைச்சுக் கூட பார்க்கலை மஞ்சு. நான் இப்போ சரா கிட்ட என்ன சொல்றது? எந்த மூஞ்சியை வச்சுட்டு நீ சொன்னதை சொல்றது??? நீ சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக அவரை மிரட்டாத குறையா மனோஜ்க்கு வேலையை கொடுக்க சொல்லி இருந்தேன்.”
“சாரி அம்மு!”
“ஷட் அப்!”
“அம்மு,” என மஞ்சு தொடர்ந்து பேச முயன்றப் போது, மறு பக்க இணைப்பு துண்டிக்கப் பட்டுவிட்டதின் அறிகுறியாக கீங் கீங் எனும் சத்தம் மட்டுமே கேட்டது.
அமுதாவின் கோபம் மஞ்சுவிற்கு புரிந்தது. ஆனால், தோழியை சமாதானப் படுத்தி விடலாம் என்று நம்பினாள். அதனால் அப்போதைக்கு அமுதாவைப் பற்றி மஞ்சு அதிகம் கவலை கொள்ளவில்லை!
மனோஜ் வீடு திரும்ப காத்திருந்து, அவனிடம், “அமுதா கிட்ட பேசிட்டேன். வேலை வேண்டாம்னு சொல்லிட்டேன்!’ என்றாள்.
முன் தினம் காருடன் சென்ற மனோஜ் விடிகாலை நேரம் தான் வீடு திரும்பினான். வந்ததும் தயாராகி அலுவலகம் சென்று விட்டான்!
அதனால் தான் அவன் வந்ததுமே அவனுக்கு பிடிக்காத வேலை இனி இல்லை என்பதை மஞ்சு தெரிவித்தாள்.
அதற்காக மனோஜ் மகிழ்ச்சி அடையவும் இல்லை, கோபப் படவும் இல்லை!
மஞ்சு அவனிடம் பேசியதாகவே காட்டிக் கொள்ளாமல் தன் வேலையை தொடர்ந்தான்.