தொடர்கதை - இன்ஸ்பெக்டர் தேன் - 12 - தேன்மொழி
கேஸ் ஃபைல் - 02 - குற்றம் புரிந்தவர்... !
ரோஹினி வழக்கு சம்மந்தமாக வினோதன் சேகரித்து வைத்திருந்த தடயங்களில் இருந்த போட்டோக்கள் ஒவ்வொன்றாக பார்த்த தென்றல்வாணன், ஒரு போட்டோவை எடுத்து வினோதனிடம் நீட்டினான்.
“இந்த போட்டோல இருக்க சிகரெட் துண்டுப் பார்த்தீயா வினோதன்?”
வினோதன் கவனமாக போட்டோவைப் பார்த்தான்.
அப்போது வாசல் மணி ஒலித்தது. தென்றல்வாணன் யார் என்று பார்க்க சென்றான்.
மிரட்டல் செய்தி வந்திருந்த பொம்மையை சேகரித்து, ஃபோரன்சிக் லேபுக்கு அனுப்ப அபினவ் வந்திருந்தான்.
“சார், எம்.எல்.ஏ-வோட பி.ஏ மூணு தடவை போன் செய்தார். வினோதன் சார் கூட பேசனும்னு சொன்னார். அவர் இல்லைன்னு சொன்னேன். உங்களை கேட்டார், நீங்களும் இல்லைன்னு சொன்னேன். வந்த உடனே பேச சொன்னார்...” அபினவ் தென்றல்வாணனிடம் சொன்னான்.
தேன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
“இன்னும் எத்தனை தடவை போன் செய்தாலும் அதையே சொல்லு, அபினவ். நாங்க ஸ்டேஷன்ல இருந்தா கூட அதையே சொல்லு...” என்றான்.
“சார்...?”
“டோன்ட் வொர்ரி, உனக்கு எந்த பிரச்சனையும் வராது. சரி இந்த பொம்மைல ஏதாவது தடயம் கிடைக்குதான்னு பார்...”
“ஓகே சார்...”
அபினவ் கிளம்பி செல்ல, தேனின் கவனம் மீண்டும் வினோதனிடம் சென்றது.