தொடர்கதை - இன்ஸ்பெக்டர் தேன் - 14 - தேன்மொழி
கேஸ் ஃபைல் - 02 - குற்றம் புரிந்தவர்... !
தென்றல்வாணனின் ஆர்வத்தை கவனித்து, திரும்பவும்,
“ஆமாம் சார் சிகரெட் துண்டு ஒன்னு இரண்டு இருந்தது,” என்று உறுதியாக சொன்னாள் விஜயா.
“இந்த ரோஹினி இன்சிடன்ட் நடக்குறதுக்கு எவ்வளவு நாள் முன்னாடி இது நடந்ததுன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” எனக் கேட்டான் தேன்.
“ஒரு, ஒரு வாரம் முன்னாடி இருக்கும் சார். நீங்க கேட்குற கேள்வி எல்லாம், எனக்கு முதல் முதல்ல வந்த சப் இன்ஸ்பெக்ட்டரை ஞாபக படுத்துது. அவரும் கூட இதே போல தான் இந்த விஷயத்தை தூண்டி, தூண்டி கேள்வி கேட்டார். கூடவே இங்கே இருந்த மீன் தொட்டி பத்தியும் கேட்டார்.”
“மீன் தொட்டியா?”
“ஆமாம் சார் அப்போ இங்கே ஒரு பெரிய மீன் தொட்டி இருக்கும். அந்த சப் இன்ஸ்பெக்டர் முதல் நாள் எதுவும் கேட்கலை ஆனால் இரண்டாவது தடவைன்னு நினைக்கிறேன், அதைப் பத்தி நிறைய கேள்விகள் கேட்டார்!”
“என்ன மாதிரி கேள்விகள் கேட்டார்?”
“எப்படி அந்த டேங்கை கிளீன் செய்வீங்க, யார் செய்வாங்க, எங்கே இருந்து அதுக்கு தேவையான பொருள் எல்லாம் வாங்குவீங்க, இப்படி நிறைய கேட்டார்!”
“ஓஹோ!” என்ற தேன், தொடர்ந்து, “ஆமாம் அந்த மீன் தொட்டி இப்போ எங்கே இருக்கு?” என்று சந்தேகத்துடன் கேட்டான்.
“அதை வீட்டுல இருந்து எடுத்தாச்சு சார். வாஸ்து படி அது இருக்குறது சரி இல்லைன்னு எடுத்தாச்சு...”