“எங்களுக்கு ஒரு முக்கியமான ஈவென்ட்க்கு போகணும் இன்ஸ்பெக்டர், நாங்க கிளம்பட்டுமா? நீங்க ரோசி கிட்ட பேசுங்க. அமிர்தா சொன்னது போல எப்போ வேணா எங்க உதவியை கேளுங்க,” என்று முடித்தாள்.
“ஷுயர் மேடம். தேங்க்ஸ்.”
*****************
அவர்கள் கிளம்பிச் சென்றதும் வினோதனும், தென்றல்வாணனும் தங்களின் நோட்ஸ்களை பகிர்ந்துக் கொண்டு பேசினார்கள்.
“திலீப் பேச்சு சந்தேகத்தைக் கொடுக்குது. எதை மறைக்க முயற்சி செய்றான்??”
“நாம வீட்டு உள்ளே வந்தப்போ பணம் பத்தி அவனை தான் அமிர்தா கேட்டுட்டு இருந்தா.”
“எனக்கு என்ன தோணுது தெரியுமா?” என வினோதன் சொல்ல வந்த நேரம்,
“நான் தான் ரோசி. என்னோட பேசனும்னு சொன்னீங்களாமே!” என ஒரு குரல் கேட்டது.
வினோதன், தேன் இருவரும் தங்கள் உரையாடலை நிறுத்தி குரல் வந்த திசையில் பார்த்தார்கள்.
ரோசிம்மா எனப்படும் ரோசி பின் நாற்பதுகளில் இருந்தாள்.
“ஆமாம், நாங்க ரோஹினி கேஸ் விஷயமா வந்திருக்கோம். உங்களுக்கு தெரிஞ்ச விபரங்கள் சொன்னா எங்களுக்கு உதவியா இருக்கும்!”
“சொல்றேன் சார். அன்னைக்கு, நான் காலையில வந்தப்போ வீட்டுல ஒரே களேபரமா இருந்தது. என்னன்னு மாணிக்கத்தை விசாரிச்சு தான் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.