தொடர்கதை - இன்ஸ்பெக்டர் தேன் - 16 - தேன்மொழி
கேஸ் ஃபைல் - 02 - குற்றம் புரிந்தவர்... !
வினோதனும், தென்றல்வாணனும் “டெரர்” தமிழை விசாரித்து உண்மையை தெரிந்துக் கொள்ள முயற்சி செய்தார்கள்.
தமிழ் அத்தனை சுலபமாக எதையும் சொல்லிவிடவில்லை. போலீஸும் அவனைப் போன்ற பல கிரிமினல்களை பார்த்திருப்பவர்கள் என்பதனால் தங்களுடைய டாக்டிக்ஸ் பயன்படுத்தி அவனை உண்மை சொல்ல வைத்தார்கள்.
உண்மை என்ன என்று தெரிந்துக் கொண்டப் போது அவர்களே கொஞ்சம் திகைத்து தான் போனார்கள்.
“நேரா ராஜசுலோச்சனா பங்களா போய் அங்கேயும் அரெஸ்ட் வேலையை முடிச்சிடலாம், தேன்!” என வினோதன் சொன்னதற்கு உடனே பதில் சொல்லாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தான் தேன்.
“என்னடா யோசிக்குற???”
“சில சமயம் இந்த வேலையை செய்யும் போது இதெல்லாம் செய்ய வேண்டி இருக்கேன்னு பிடிக்க மாட்டேங்குது வினோதன்!”
“தப்பு செய்றவங்களை கண்டிக்க சட்டம் வேணும் தேன். நாம இதை எல்லாம் செய்தா தான் இந்த சமூகத்துல சாதாரண மக்கள் நடமாடவே முடியும்!”
நண்பன் சொன்னதை ஏற்றுக் கொண்டு தலையை அசைத்த தென்றல்வாணன் தன் மொபைல் போனை கையில் எடுத்தான்.
“யார் கிட்ட பேசப் போற??”
“டிஸ்பி கிட்ட! அவரும் வரது சரியா இருக்கும்!”
வினோதனுக்கும் அது சரி என்றே தோன்றியது.