“ரொம்ப கவலைப் படாதீங்க, அவங்க மதியூர் தானே வராங்க. சீக்கிரமா அம்மான்னு சொன்னாலே ஆ-ன்னு அலறுவீங்க!”
இனிமேல் தானா அலற வேண்டும் என தேன் மனதினுள் நினைத்துக் கொண்டான். அவனுக்கு குமுதாவை நன்றாகவே தெரியும். ஆனால் சத்யாவிற்காக தான் அமைதியாக இருக்கிறான்!
“ம்ம்ம்ம்... ஆனாலும் ஒன்னு சொல்லனும்ங்க... நீங்க ரொம்ப நல்லவர்...! எனக்காக தான் அம்மா கிட்ட அமைதியா இருக்கீங்கன்னு தெரியும்! நானா செலக்ட் செய்தாலும் தெளிவா தான் செலக்ட் செய்திருக்கேன்...” என்ற சத்யா தேன் எதிர்பார்த்திருக்காத விதத்தில் அவனின் கன்னத்தில் முத்தமிட்டு அதிர்ச்சி கொடுத்து விட்டு சென்றாள்!
சத்யாவிற்காக கூட பொறுமையாக இருப்பது கடினம் என்ற அளவிற்கு குமுதா தேன்-ன் பொறுமையை சோதித்தாள்.
“முதல்ல அந்த ஊரை சுத்தி பார்க்கனும்... நீங்க ஒரு ஒரு வாரம் லீவ் போடுங்க...” என்று தென்றல்வாணனிடம் சொன்னாள் குமுதா.
இது என்னடா நமக்கு ஆர்டர் போட இன்னும் ஒருவரா என மனதினுள் குமைந்த படி,
“லீவ் கிடைக்குமான்னு தெரியலை அத்தை...” என்றான் தேன்.
“அதெல்லாம் கிடைக்கும், கிடைக்காம என்ன?” என்ற குமுதாவின் பேச்சு வேறு திசைக்கு திரும்பியது!
“அந்த கேஸுல ராஜசுலோச்சனா தான் கொலை செய்திருப்பான்னு எனக்கு முதலிலேயே தெரியும்... இவர் கிட்ட கூட சொன்னேன்... என்னங்க...”
மனைவியின் கேள்விக்கு,
“ஆமாமாம்...” என்று தலையை அசைத்தார் விஜயநாதன்.