தொடர்கதை - மானசா தீவு – 05 - விஜேஜி
அடுத்த நாள் காலை மாதவன் வேலை இருக்கிறது என்று கிளம்பி போய்விட்டான். மானசி தன் அம்மா அப்பாவை பார்க்க சென்றாள். அவளுக்காக தன் படகை விட்டு விட்டு சென்றான் அவள் காதல் கணவன். அவள் கொச்சியிலுள்ள தன் அம்மாவின் வீட்டுக்கு அருகில், அந்த அக்கிரஹாரத்தில் காலடி வைத்த போது, ஓரிருவர் வாசலில் வடகமும் பருப்பும் காய் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
“ யாரது? மான்சியா?”
“ ஆமாம் மாமி…. எப்படி இருக்கீங்கோ?”
“நான் நன்னாயிரேக்கேண்டியம்மா…. இத்தனை வருஷத்துக்கு அப்புறம் வந்திருக்கே, இப்பத்தான் தாய், தோப்பனார் ஞாபகம் வந்ததா? “
அவள் புன்முறுவலோடு சென்றாள்.
அவள் தன் வீட்டின் கதவை தட்டினாள். அம்மா தான் வந்தாள். “ யார் அது மானசியா? எப்படிடி இருக்காய்? உனக்கு என்ன ஆச்சு நீ எங்கயிருக்காய், எப்படியிருக்காயோன்னு ஒவ்வொரு நாளும் ஒனக்காக அந்த பகவான் கிட்ட வேண்டிண்டிரேந்தேன். என்ன இருந்தாலும் பெத்த மனமில்லையா?”
நான் நன்னாயிருக்கேன்ம்மா, “ அவள் வயிற்றை தடவி காட்டினாள்.
மென்மையான குரலில், “ அடி, உண்டாயிருக்கியா?” அவள் அருகில் செல்ல ஒரு அடி எடுத்து வைத்தாள், மானசியின் அம்மா.
“யாராக்கும் அது?” என்று கேட்டுக் கொண்டு வந்தார் மானசியின அப்பா.
மானசாவும் அவள் அம்மாவும் அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டார்கள்.
“ இவளா? இவ ஏதுக்கடி இங்க வந்தா? வெளிய போக சொல்லு அந்த ஓடு….”