தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 04 - பிந்து வினோத்
04. கண்கள் முழுதும் உந்தன் கனவே...
அன்று சனிக் கிழமை...
வழக்கம் போல் லேட்டாக தூங்கி எழுந்து, தலைக்கு குளித்தாள் பாரதி! பின் பொறுமையாக காலை உணவை கொறித்து விட்டு, தன் நீண்ட கூந்தலை விரித்துப் போட்டு காய விட்ட படி ஹாஸ்டல் அறையில் அமர்ந்திருந்தாள். திடீரென கீழே இருந்து சத்தமாக ஒலித்த அந்த குரலை கேட்டு ஆச்சர்யப் பட்டாள்.
"பாரதி... விசிட்டர் வந்திருக்காங்க...!"
பொதுவாக பாரதியை ஹாஸ்டலில் பார்க்க பவித்ரா அவள் கணவனுடன் எப்போதேனும் வருவதுண்டு.. மற்றபடி பாரதியே நேரம் கிடைக்கும் போதெல்லாம் பவித்ராவின் வீட்டுக்கு சென்று விடுவாள். இன்றும் மதிய உணவிற்கு மேல் பவித்ராவின் வீட்டிற்கு செல்லலாம் என்று தான் திட்டம் வைத்திருந்தாள்.
பவித்ராவை தவிர பாரதியை சந்திக்க யாரும் இதுவரை ஹாஸ்டலுக்கு வந்ததில்லை... ஆனால் பவித்ரா இந்த நேரத்தில் வர மாட்டாளே?
இப்படி மனதில் சற்றே குழம்பியபடி, தன் அறை இருந்த மூன்றாம் மாடியில் இருந்து படிகளில் மெதுவாக இறங்கி வந்தாள் பாரதி. கீழே வந்து விடுதி ஆயாவை கேள்வியோடு நோக்கினாள். அவளின் கேள்வியை புரிந்துக் கொண்டு,
"அதோ அவர் தான் உன்னை பார்க்க வந்திருக்கார்...” என்ற பதிலை வாங்கி விட்டு, ஆச்சர்யமும் ஆர்வமுமாக திரும்பி பார்த்தவள், அங்கே விவேக் நிற்பதை கண்டு திகைத்தாள்.
ஆனாலும் சீக்கிரமே தன்னை சுதாரித்துக் கொண்டு, தனக்கே உரிய மிடுக்குடன், விவேக்கின் அருகே சென்று,
"என்ன ஆச்சு சார்? மதுவை பத்தி ஏதாவது கேட்க வந்தீங்களா?" என்று வினவினாள்.