“ஆமாங்க உமா, பாரதிக்கு அது ரொம்ப கஷ்டம் தான்... எனக்கு அதெல்லாம் பிரச்சனை இல்லை... பாரதி, நீ வேணும்னா உமா அக்கான்னு கூப்பிடேன்...” என்று பாரதிக்கு மட்டும் தெரியும் படி கண்ணை சிமிட்டி விட்டு சொன்னாள் பவித்ரா.
பாரதி அவளை முறைக்கும் போதே,
“ஓ! என்னை பார்த்தால் ரொம்ப வயசானவளா தெரியுதோ????” என்றாள் உமா.
“ச்சே ச்சே அப்படி எல்லாம் எதுவும் இல்லை... ஸ்டுடென்ட் ரீலேட்டிவ் ஆச்சேன்னு தான் யோசிச்சேன்... வேற ஒன்னும் இல்லை... உங்களை உமான்னே கூப்பிடுறேன், சரியா?”
“பெர்ஃபெக்ட்... ரொம்ப தேங்க்ஸ்... சரி, நான் மதுவுக்கு ஹெல்ப் செய்துட்டு வந்து உங்க கிட்ட பேசுறேன்...”
உமா சென்று விடவும், பாரதியும், பவித்ராவும் பார்ட்டிக்கு வந்திருந்த மற்ற ஆசிரியர்களின் அருகில் சென்று அமர்ந்தனர். சிறிது நேரத்திலேயே மது அவளின் பிறந்தநாளை சந்தோஷமாக கேக் வெட்டி கொண்டாடினாள். வெட்டிய கேக்கை, அப்பா, அம்மா, அண்ணாக்கள், அண்ணி என அனைவருக்கும் அவள் ஊட்டி விட்டதில் இருந்தே அவர்களின் குடும்பத்தில் ஓங்கி இருந்த ஒற்றுமை தெரிந்தது. மற்றவர்களும் கூட மகிழ்ச்சியோடு அவளை வாழ்த்தினர்.
அதை தொடர்ந்து, ஏற்பாடு செய்திருந்த விருந்து தொடங்கியது. மதுவின் குடும்பத்தின் வசதிக்கேற்ப விருந்து தடபுடலாக தான் இருந்தது. பஃபெ முறையில் இருந்த உணவில் சிறிது எடுத்து கொண்டு பாரதியும், பவித்ராவும் ஒரு ஓரத்தில் அமர்ந்தனர். பேசியபடி உணவு உண்டதில் நேரம் போனதும் தெரியவில்லை, உணவு உள்ளே சென்றதும் தெரியவில்லை! கிட்டத்தட்ட அவர்கள் சாப்பிட்டு முடித்த நிலையில் உமா அவர்களை மீண்டும் தேடி வந்தாள்.
“சாரி, உங்க இரண்டுப் பேரையும் கவனிக்க முடியலை...”
“என்ன நீங்க, நானாக என்னவோ பெரிய விஐபி’ஸ் போல சொல்றீங்க...” என்றாள் பாரதி.