ஹாலில் அமர்ந்திருந்த மதுவையும் உமாவையும் பார்த்து,
“ஹலோ உமா அக்கா... ஹாய் மது!” என்றவள், கூடவே, “மது, இந்த டிரஸ் உனக்கு ரொம்ப நல்லா இருக்கு...” என்றாள்.
“தேங்க்ஸ் ஸ்ருதி...” என்றாள் மது முகம் மலர!
சுருதியுடன் ஒன்றிரண்டு நிமிடங்கள் பேசி விட்டு உமா ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்துப் போய் விட, மதுவும், சுருதியும் கதைப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது போனில் பேசிய படி கற்பகம் அங்கே வந்தாள். மதுவுடன் மிகுந்த அன்பொழுக ஸ்ருதி பேசுவதைப் பார்த்து மிகவும் சந்தோஷப் பட்டாள்.
விவேக் போட்ட கண்டிஷன் நினைவுக்கு வரவும், மகளிடம்,
“மது, விவேக் ஏதோ பேசணும்னு சொன்னான், கொஞ்சம் இங்கே வர சொல்லேன்...” என்றாள்.
மது உடனடியாக அண்ணனை தேடிச் சென்றாள்... ஒரு சில நிமிடங்களில் அண்ணனுடன் திரும்பி வரவும் செய்தாள்...
ஸ்ருதி அங்கே இருப்பதை கவனித்து விவேக் அம்மாவைப் பார்த்து கண் சிமிட்ட, புரிந்துக் கொண்ட கற்பகம், கடுப்புடனே,
“என்னவோ பேசணும்னு சொன்னீயே விவேக்...” என்றாள்.
“ஆமாம் அம்மா... என்னுடைய புது பிஸ்னஸ் பத்தி தான் பேசனும்...”
“இது என்னடா புதுசா உனக்கு மட்டும் தனி பிஸ்னஸ்???”
“அம்மா, எனக்கு இந்த மாதிரி ஏற்கனவே இருக்கிற பிஸ்னஸ் எடுத்து நடத்துறதை விட எனக்குன்னு புதுசா ஒரு சாம்ராஜ்யம் உருவாக்கிக்க தான் ஆசை... அது தான் பிடிச்சிருக்கு...”