தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 10 - பிந்து வினோத்
10. உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே...
விசிலடித்துக் கொண்டே உணவறைக்கு வந்தான் விவேக்.
“அண்ணி, செம பசி... சாப்பாடு ரெடியா?”
“விவேக், நான் நித்தியை குளிப்பாட்டப் போறேன்... இருங்க தேவகி கிட்ட உங்களுக்கு பரிமாற சொல்றேன்...” என்று உள்ளே எங்கேயோ இருந்து குரல் கொடுத்தாள் உமா.
“ஓ நோ... ப்ளீஸ் அண்ணி... நீங்களே வாங்க... தேவகிக்கு எனக்கு பிடிச்ச மாதிரி சாப்பாடு எல்லாம் செர்வ் பண்ண தெரியாது...”
“இந்த வாய்க்கு எல்லாம் குறைச்சல் இல்லை... இப்படி உங்க அண்ணியை தொல்லை செய்றதுக்கு, உனக்குப் பிடிச்ச மாதிரி செர்வ் செய்ய, ஒரு கல்யாணம் செஞ்சு மனைவின்னு ஒருத்திய கூட்டிட்டு வர வேண்டியது தானே?“ என்றப் படி வந்து மகனுக்கு பரிமாறத் தொடங்கினாள் கற்பகம்.
“நான் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னா சொல்றேன்... ஒரு நல்ல பொண்ணை கண்டுபிடிங்க ம்மா...”
விவேக் அதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே, குழந்தை நித்தியாவை தூக்கியப் படி உமாவும் அங்கே வந்தாள்.
“இருங்க அத்தை, நான் பரிமாறுறேன்...”
“பரவாயில்லை உமா... நீ என் செல்ல பேத்தியை கவனி... நான் இவனை கவனிக்குறேன்...” என்ற கற்பகம், விவேக் பக்கம் திரும்பி,
“ஏன்டா, உன் கண்ணில் ஏதாவது கோளாறா என்ன? ஸ்ருதியை விட உனக்கு ஏத்த பொண்ணுக்கு எங்கேடா போறது? அவளுக்கு என்னடா குறைச்சல்?” என்று சூடாக வினவினாள்.