தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 11 - பிந்து வினோத்
11. உன்னருகே நான் இருந்தால்...
நாட்கள் வேகமாக நகர்ந்துக் கொண்டிருந்தன. மாணவர்களுக்கான இறுதி தேர்வு தேதியும் நெருங்கி கொண்டிருந்தது. கடந்துப் போன சில மாதங்களில் பாரதிக்கும் மதுமதிக்கும் நடுவில் இருந்த உறவு மேலும் வலுப் பெற்றிருந்தது. படிப்பு என்றில்லாமல் பொதுவாக எல்லா விஷயத்திற்கும் மதுமதி பாரதியின் உதவியை நாடினாள். பாரதியும் சலிக்காமல் முடிந்த அளவில் அவளுக்கு வழிகாட்டியாக இருந்து உதவினாள். உண்மையாகவே மதுவிடம் பாரதிக்கும் ஒருவித நட்புறவு ஏற்பட்டிருந்தப் போதும், அவளின் இந்த கூடுதல் பரிவின் உண்மைக் காரணம் விவேக் தான் என்பது பாரதியின் உள்மனதிற்கு மட்டும் தெரிந்த ரகசியம். அவ்வப்போது, அன்று ஹாஸ்டல் அருகில் இருந்த மரத்தடியில் அமர்ந்துப் பேசும் போது, விவேக் தன்னை மறந்துப் பேசியது பாரதியின் நினைவில் தோன்றும்... தானாகவே ஒரு புன்னகையும் அவள் முகத்தில் தோன்றும். ஆனால், கூடவே அவன் ஸ்ருதியை திருமணம் செய்துக் கொல்லப் போவதாக சொன்னதும் நினைவில் தோன்றும். மனதளவில் கூட விவேக் பற்றி இப்படி எல்லாம் இனி நினைப்பது தவறு என தன்னைத் தானே கடிந்துக் கொள்வாள். ஆனாலும், மீண்டும் மீண்டும் ஏதேனும் காரணத்திற்காக விவேக்கின் நினைவு அவளுக்கு தோன்றிக் கொண்டே தான் இருந்தது.
மதுவின் பிறந்த நாள் விழாவிற்கு பிறகு, விவேக்கை நேராக சந்திக்கும் வாய்ப்பு பாரதிக்கு ஏற்படவில்லை. இப்போதெல்லாம் மதுவை அழைத்து செல்ல விவேக் கல்லூரி வருவது வழக்கமாக இருந்தது. முதல் நாள் அவனை அங்கே பார்த்து ஆச்சர்யப் பட்டு பாரதி அவன் பக்கம் பார்க்க தான் செய்தாள். ஆனால், முன்புப் போல கறுப்பு கண்ணாடியுடன் வந்திருந்த விவேக், பாரதியை கவனித்ததாகவே தெரியவில்லை. இரண்டு நாட்கள் தொடர்ந்து இதே போல் நடக்கவும், தன் மனதை அடக்கி, அந்த பக்கமே பார்ப்பதை தவிர்க்கத் தொடங்கினாள் பாரதி.
அவளுக்கு இப்போது விவேக்கின் மேல் முன்பு போல் கோபமோ வருத்தமோ ஏற்படவில்லை. வேறு ஒருத்தியை திருமணம் செய்துக் கொள்ள இருப்பவன், மற்ற பெண்களை தேவை இல்லாமல் பார்ப்பதும் சரி இல்லை! எனவே அவன் மீதும் அவளால் குற்றம் சொல்ல முடியவில்லை!
இருந்தாலும், மதுமதியின் பார்ட்டி முடிந்து நான்கு மாதங்கள் ஓடி விட்டன... இன்னமும் விவேக் திருமணம் குறித்த எந்த வித செய்தியும் மது சொல்லாமல் இருப்பது பாரதிக்கு ஆச்சர்யமாக இருந்தது. கேட்டுத் தெரிந்துக் கொள்ள ஆர்வம் இருந்தப் போதும், அதை