பவித்ராவிற்கு சந்தோஷம் தாளவில்லை!
“கைக் கொடுங்க உமா... நூத்துல ஒரு வார்த்தை... நான் சொன்னா ஏதாவது இவக் கேட்டால் தானே... எப்போ பார் கல்யாணம் வேண்டாம் வேண்டாம்ன்னு ஒரே ராகம் தான்!” என்றாள் பவித்ரா.
உமாவைப் பார்த்து புன்னகைத்த பாரதி, மேலே எதுவும் சொல்லாமல் நித்யாவை செல்லம் கொஞ்சியப் படி இருந்தாள். ஒரு சில வினாடி அமைதிக்குப் பிறகு,
“பாரதி, இது உங்க பர்சனல் விஷயம் தான்... இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியலை... எவ்வளவு நாளைக்கு நீங்க இப்படி தனியா இருக்க முடியும்... பவித்ரா சொல்றதைக் கேளுங்க...” என்றாள் உமா.
“அது...” என்று பாரதி ஏதோ சொல்ல தொடங்கியப் போது, கைகளில் தட்டுடன் நிரஞ்சன் வந்து சேர்ந்தான்.
வாங்கியிருந்த ஜூஸ் மற்றும் உணவுப் பொருட்களை மேஜை மீது வைத்து விட்டு,
“சாரி, உங்களுக்கு என்ன வேணும்னு கேட்காமல் போயிட்டேன்... அதனால் நானே செலெக்ட் செஞ்சேன்...” என்றான்.
“இப்படி நீங்க வாங்கனும்னே இல்லையே, சார்... பாவம் நீங்களே ஃபேமிலியோட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு வந்து இருப்பீங்க... நாங்க நடுவுல வந்துட்டோம்... சாரி...” என்றாள் பாரதி.
“நீங்க சொன்னதில பாதி சரி பாரதி... இவரை கிட்டத்தட்ட பிடிச்சு இழுத்து தான் கூட்டிட்டு வந்தேன்... இன்னைக்கு எங்க கல்யாண நாள்...” என்றாள் உமா.
“சொல்லவே இல்லைஏ நீங்க... ஹாப்பி வெட்டிங் அனிவேர்சரி...”