பாரு...." என்ற ரமேஷ், முறைத்துக் கொண்டிருந்த மனைவியின் கன்னத்தை செல்லமாக கிள்ளி, உல்லாசமாக கண்ணடித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
பவித்ராவிற்கு கோபமாக வந்தது... காலேஜில் தேர்வு முடியும் முன் வகுப்பாசிரியை என்ற முறையில் அவள் சில, பல வேலைகளை முடிக்க வேண்டி இருந்தது. சில பேப்பர்களை ஒழுங்குப் படுத்தும் வேலையை வீட்டில் செய்யலாமென கையோடு எடுத்து வந்திருந்தாள். இன்று தானா அவள் கணவனுக்கு இனிப்பு உண்ணும் ஆசை வர வேண்டும்?
மனதில் கறுவினாலும், மற்ற சமையலோடு அவசரமாக கேசரியும் சேர்த்து செய்தாள். கிட்டத்தட்ட சமையல் முடியும் நேரத்தில் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. கதவு திறக்கப் படும் ஓசையும், தொடர்ந்த,
"வாங்க வாங்க... உட்காருங்க..." என்ற ரமேஷின் குரலும் கேட்டது.
யாராக இருக்கும் என்று பவித்ரா யோசிக்கும் போதே,
"பவித்ரா... இங்கே வா...." என்றழைத்த கணவனின் குரல் கேட்டது.
கேசத்தை சரி செய்து, புடவையை நேர் செய்து விட்டு வந்த பவித்ரா, அங்கே அமர்ந்திருந்த விவேக்கை கண்டு திகைத்துப் போனாள்!
பவித்ரா விவேக்கை அங்கே எதிர்பார்க்கவேயில்லை. அவன் ஏன் இங்கே வந்தான்? எதற்கு வந்தான்?
மனைவியை ஒருப் பார்வை பார்த்த ரமேஷ், அவள் இயல்புக்கு திரும்ப ஒரு சில வினாடிகள் கொடுக்க விரும்பி,
"மிஸ்டர் விவேக், உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன், இவங்க என் மனைவி பவித்ரா. பாரதி கூட காலேஜில ஒன்னா வேலை செய்றாங்க. இது என்னோட அம்மா. இந்த பெரிய மனுஷி என் பொண்ணு..." என்று விவேக்கிற்கு தன் குடும்பத்தினரை அறிமுகம் செய்தவன், தொடர்ந்து கமலாவிடம்,