"தேங்க்ஸ்..." என்றான் விவேக்.
பவித்ரா ரமேஷ் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
கமலா, ரமேஷ், பவித்ரா என மூன்றுப் பேரையும் பொதுவாக பார்த்துப் பேசினான் விவேக்.
"நான் இங்கே பேச வந்திருப்பது சிஸ்டரோட ஃப்ரெண்ட் பாரதி விஷயமா... எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு, கல்யாணம் செய்துக்க ஆசைப் படுறேன்... அவங்க அம்மா அப்பா இருந்திருந்தா அவங்க கிட்டப் போய் நேரா பேசி இருப்பேன். இப்போ எனக்கு தெரிஞ்சு அவங்களுக்கு க்ளோஸ் நீங்க எல்லோரும் தான்...." என்று வாக்கியத்தை முடிக்காது இழுத்தான் விவேக்.
"ரொம்ப சரி, மிஸ்டர் விவேக். நான் மதியம் சொன்னது போல் பாரதி எனக்கு தங்கச்சி போல் தான்..." என்றான் ரமேஷ்.
பவித்ரா, இவர்கள் இருவரும் மதியம் சந்தித்தார்களா? என யோசனையில் ஆழ்ந்திருக்கும் போதே, மகனின் பேச்சில் குறுக்கிட்டு பேசினார் கமலா.
"தங்கச்சி போல் இல்லை, தங்கச்சியே தான். ஆமாம் தம்பி, அவள் எனக்கு பாரதி மகளே தான். உங்களுக்குப் பிடிச்சிருக்கு சரி... ஆனால் பாரதிக்கு பிடிக்கனுமே?"
"ரொம்ப சரி, அம்மா. அது தானே இப்போ பிரச்சனை. பாரதி கிட்ட மெதுவா பேசி பழகத் தான் ட்ரை செஞ்சுட்டு இருக்கேன். ஆனால், என்னவோ ரெண்டு வாரமா பாரதி மேடம் சரியா என் கிட்டப் பேசுறதில்லை..."
"அது வேற ஒன்னும் இல்லை, மிஸ்டர் விவேக்... எல்லாம் இதோ இருக்காங்களே பாரதியோட ஃபிரென்ட். இந்த மேடமின் கைங்கரியம் தான்... பவித்ரா சும்மா ஏதோ கிண்டல் செய்ய போய் பாரதி உங்களை இப்போ இக்னோர் செய்றாங்க..." என்று விளக்கம் கொடுத்தான் ரமேஷ்.
விவேக்கின் முகம் தெளிவானது!