அசைத்து கால்களை ஆட்டி, பொக்கை சிரிப்புடன் சந்தோஷத்தை வெளிபடுத்தினாள். சில மணி நேரமாக பழகி இருந்த தோழி சிரிப்பதை பார்த்த நித்திலாவும் சிரிப்பை சிந்தினாள். இருவரின் அழகிய சிரிப்பிலும் மெய் சிலிர்த்து புன்னகையுடன் அமர்ந்திருந்தவளை இமைக்காமல் பார்த்தபடி விவேக் அமர்ந்திருந்தான்.
அவன் மனதில் பல விதமான கற்பனைகள் ஓடிக் கொண்டிருந்தது. அவனுக்கும் பாரதிக்கும் திருமணமாகி இது போல் மணியாக இரண்டு குழந்தைகள் பிறந்திருப்பதாக கற்பனை செய்து மகிழ்ந்துக் கொண்டிருந்தான். பாரதி அவனின் பார்வையையும் கவனிக்க வில்லை, அதில் மிதந்த கற்பனையையும் கவனிக்க வில்லை! அவள் இரண்டு குழந்தைகளிடம் மட்டுமே கவனம் வைத்திருந்தாள். இப்படியே ஒரு சில நிமிடங்களும் கழியவும், உமாவும், பவித்ராவும் அங்கே வந்தார்கள்,
"சரி உங்க இரண்டு பேரையும் ரீலீவ் செய்ய நாங்க வந்தாச்சு... நீங்க இருவரும் இனி ஃப்ரீ...." என்றாள் உமா.
"ஆமாம் விவேக் சார், உங்க கற்பனை குதிரையை கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்க விடுங்க..." என்றாள் பவித்ரா.
அவசரமாக பாரதியிடம் இருந்து பார்வையை திருப்பிய விவேக், மற்ற இருவரின்
முகத்திலும் கேலி புன்னகையை பார்த்து விட்டு, அங்கிருந்து தப்பிக்க,
"சரி சரி, உங்க பெண்கள் மாநாட்டில் நான் எதற்கு, நான் கிளம்புறேன்...." என்றபடி அங்கிருந்து நகர்ந்தான்.
நித்யாவை மடியில் வைத்த படி உமா அமரவும், பவித்ரா மற்ற இருவரின் எதிரில் அமர்ந்தாள்.
"ஆனாலும், விவேக் நல்லா தான் சைட் அடிக்கிறார்...." என்றாள் பவித்ரா.
"ஹேய் பவி என்ன இது?" என்றாள் பாரதி சற்றே அதிர்ச்சியுடன். உமா அருகில் இருக்கும் போது பவித்ரா ஏதேனும் உளறி விட கூடாதே என்ற கவலை அவளுக்கு.