தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
08. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
இருவரும் அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்த உடன், இந்து சஞ்சீவிடம்,
"உங்க கார்ல போகலாமா?" என்றாள்.
"சாரி, நான் இன்னைக்கு கார் எடுத்துட்டு வரலை. அண்ணன் தான் என்னை டிராப் பண்ணினார்," என்றான் சஞ்சீவ் சங்கோஜத்துடன்!
"ஒ, இட்ஸ் ஓகே! சரி, வாங்க அப்போ என் கார்ல போகலாம்..."
இருவரும் நடந்து அவளின் சிவப்பு நிற ஸ்விஃப்ட் அருகில் சென்ற உடன், பக்கத்தில் எங்கோ நின்றிருந்த டிரைவர் ஓடி வந்தார்.
"ஜெயா அண்ணா, பக்கத்தில இருக்கே அந்த காஃபி ஷாப் போகணும்," என்றாள் இந்து.
"சரி, சின்ன அம்மா!" என்று கார் கதவை திறந்து விட்டார் ஜெயா.
"இந்து, உங்களுக்கு கார் டிரைவ் பண்ண தெரியாதா என்ன?" என்று ஆச்சர்யத்துடன் கேட்டான் சஞ்சீவ்.
ஒரு நொடி தயங்கிவிட்டு,
"வாங்க நாம காஃபி ஷாப்ல போய் பேசலாம்," என்றாள் இந்து.
இருவரும் அருகில் இருந்த காபி-டே'க்குள் சென்று அமர்ந்தார்கள். அதற்காகவே காத்திருந்தது போல், சஞ்சீவ்,
"இப்போ சொல்லுங்க அப்படி என்ன ரகசியம்?" என்றுக் கேட்டான் சஞ்சீவ்.
"கார் டிரைவிங் பத்தி தானே கேட்குறீங்க? ரகசியம் எல்லாம் இல்லை... உங்களுக்கு தெரியும் தானே,என் அப்பா கார் அக்சிடன்டில தான் தவறிட்டார்.. அதனால என் அம்மாக்கு பயம்...