தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
12. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
ஒன்றிரண்டு வினாடிகளில் தன்னை சமாளித்து கொண்ட சஞ்சீவ்,
"அச்சச்சோ... கவரைக் கொடுக்க மறந்தே போயிட்டேன் அண்ணா... சாரி... நான் நாளைக்கு இந்து வீட்டுக்குப் போய் ஆன்ட்டி கிட்டயே நேரா கவரைக் கொடுத்துடுறேனே..." என்றான்
ராஜீவும் அதை ஏற்றுக் கொண்டான்.
"ப்ளீஸ் டா நாளைக்கு மறந்துராதே... நான் அர்ச்சனா ஆன்ட்டி கிட்ட சொல்லி வச்சிருந்தேன்... இட்ஸ் இம்பார்டன்ட்...!" என்று தம்பியிடம் சொன்ன ராஜீவ், அம்மாவும் கீதாவும் கவனிப்பதை உணர்ந்து,
"இந்துக்குப் பார்க்க... பிரசாத்தோட ஜாதகம் இவன் கிட்ட கொடுத்து கொடுக்க சொல்லி இருந்தேன்..." என்று சுருக்கமாக விளக்கமும் கொடுத்தான்!
கீதாவிற்கு அதிசயமாக இருந்தது. பிரசாத்தை இந்துவும் சஞ்சீவும் காஃபி டே'வில் சந்தித்தது அவள் அறிந்த விஷயம் தான்! சஞ்சீவ் நிஜமாகவே மறந்துப் போனானா, அல்லாது வேண்டுமென்றே கவரைக் கொடுக்கவில்லையா என்றக் கேள்வியோடு கீதா சஞ்சீவைப் பார்த்தாள்.
சஞ்சீவும் அண்ணி எங்கே தன் 'கோலமாலை'க் கண்டு கொள்வார்களோ என்று கீதாவைப் பார்த்தான். அவன் முகத்தைப் பார்த்தே உண்மையை அறிந்துக் கொண்டாள் கீதா. மனதுள் சிரித்துக் கொண்டாள்!!!
*****
அனைவரும் உணவு அருந்தி முடித்தப் பின், கீதாவும், கலாவும் ஒன்றாக உணவறையில் இருந்த பொருட்களை எடுத்து வைத்தார்கள். கலாவை உணவு அருந்த சொல்லி விட்டு தங்கள் அறை நோக்கி நடந்தாள் கீதா. அவளுக்கு தான் அறிந்த விஷயங்களை ராஜீவிடம் சொல்லி வைப்பது நல்லது என்று தோன்றியது. அவள் போகும் வழியில் இருந்த காஞ்சனாவின் அறையைப் பார்த்தவள், கதவை தட்டி விட்டு உள்ளே சென்றாள்.