“நான் தூங்கும் வரை இங்கேயே இரேன்...” சிறுவனைப் போல் வேண்டியவனை, இறுக்க அணைத்துக் கொள்ள வேண்டும் என்று எழுந்த ஆர்வத்தை மறைத்து விட்டு, அவனருகே அமர்ந்து, அவன் நெற்றியை இதமாக தடவிக் கொடுத்தாள் பாரதி. மனைவியின் அருகாமையை ரசித்தபடி ஒரு சில நிமிடங்களில் தூங்கிப் போனான் விவேக்.
🌼🌸❀✿🌷
மனதில் எதையோ யோசித்தப் படி வந்த பாரதி,
“என்ன பாரதி, ஒரு காஃபி கொடுக்கவா இவ்வளவு நேரம்?” என்ற உமாவின் குரலில் சிந்தனை கலைந்துப் பார்த்தாள்.
“ப்ச்... அவருக்கு தலைவலி உமா... பாவம் ரொம்ப வலிக்குதுப் போல...” என்றாள்.
ஏதோ அவளுக்கு வலிப்பது போல் பாரதி சொன்ன விதத்தை கவனித்த கற்பகம்,
“டாக்டரை போய் பாருன்னு நானும் எவ்வளவு நாளா சொல்றேன், கேட்டால் தானே. கண்ட கண்ட மாத்திரையை சாப்பிட வேண்டியது...” என்றாள்.
“ஏன் அத்தை, அவருக்கு அடிக்கடி இந்த தலை வலி வருமா என்ன?”
“அடிக்கடின்னு இல்லை, அப்பப்போ வரும்...”
“ம்ம்ம்...”
“சரி பாரதி, நீயும் வா, நாம எல்லோரும் சாப்பிடுவோம்...”
“இல்லை அத்தை, நீங்க சாப்பிடுங்க, எனக்கு இப்போ பசி இல்லை...”