பொதுவாக, உணவு நேரத்தில் உணவு உண்ண ஐந்து நிமிடம் தாமதமானாலும் கோபத்தைக் காட்டும் பாரதி, பசி இல்லை என்று சொல்வதை ஆச்சர்யமாகப் பார்த்தாள் பவித்ரா. ஒரே நாளில் அவளின் தோழி இப்படி மாறிப் போவாள் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. ஒரு சில நாட்களுக்கு முன் வரை, இந்த திருமணம் வேண்டாம் என்று மறுத்து அடம் பிடித்த பாரதியை மனதில் கொண்டு வந்து சிரித்து விட்டு, காலை உணவு உண்ண தொடங்கினாள் பவித்ரா.
அண்ணி, அண்ணி என பாரதியை சுற்றிக் கொண்டிருந்தாள் மது. அவளுக்கு மிகவும் பிடித்த பாரதி மேடமே, அவளின் பிரியமான அண்ணனுக்கு மனைவியாக வந்ததில் அவளின் மனம் சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருந்தது. சில முறை அவள் அண்ணி என்று அழைக்கும் போது உமாவும் திரும்பி பார்க்கவும்,
“ஹுஹும்... இந்த் குழப்பத்தை தீர்க்க ஒரே வழி தான் இருக்கு... இனிமேல் நீங்க பெரிய அண்ணி, இவங்க சின்ன அண்ணி...” என்றாள் மது.
உமா சரி என ஒப்புதல் கொடுத்தாள். ஆனால் பாரதி அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
“மது, என்னை சின்ன அண்ணின்னு கூப்பிடு... ஆனால் உமாவை எப்போதும் போல் அண்ணின்னே கூப்பிடு... எதற்கு இந்த தேவை இல்லாத மாற்றம்?”
“அதுவும் சரி தான்...” என ஒப்புக் கொண்டாள் மது. அதற்குள் கற்பகம் அழைக்கவே, அதே துள்ளலுடன் அங்கிருந்து சென்றாள்.
அதுவரை அதே இடத்தில அமைதியாக இருந்த பவித்ரா,
“இதோ பாருடா, கல்யாணம் ஆகி ஒரு நாள் ஆகலை, அதற்குள் என் பாருவிற்கு பொறுப்பான பேச்சு எல்லாம் கூட வந்து இருக்கே?” என்றாள் கேலியாக!
“ஹேய் பவி, நான் எப்போ பொறுப்பிலாமல் இருந்தேன்?” என்றாள் பாரதி.