பவித்ராவின் வீட்டில் பாரதி எதிர்பார்த்ததைப் போலவே நேரம் இனிமையாக சென்றது. ரமேஷ் அன்று விருந்து தயார் செய்து அசத்தி இருந்தான். அவனை பாரதி தொடங்கி அனைவரும் புகழவும்,
“தெரியும், தெரியும், பாரதி... உன்னை உன் ஃபிரெண்ட் சமையலில் இருந்து காப்பாத்தி இருக்கேன்... உனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும்னு என்னை விட வேறு யாருக்கு தெரியும்?” என்றான் ரமேஷ் கேலியாக!
பவித்ரா அவனை கோபமாக முறைப்பதை கவனித்து விட்டு,
“ஹலோ மச்சான், சும்மா கதை விடாதீங்க... நான் முதல் நாள் இங்கே வந்தப் போது, சிஸ்டர் கொடுத்த கேசரி டேஸ்ட் இன்னமும் இருக்கு... அப்படி ஒரு கேசரியை நான் சாப்பிட்டதே இல்லை...” என்று கூசாமல் பொய் சொல்லி பவித்ராவை 'ஐஸ்' வைத்தான் விவேக்!
அதை புரிந்துக் கொண்டப் போதும், பவித்ராவின் முகத்தில் மலர்ச்சியும் தோன்றியது.
“ஆமாம், பின்ன என் மருமகள் யாரு? இந்த காலத்தில இப்படி படிச்சு வேலைக்கு போனாலும், வீட்டு வேலை எல்லாம் இழுத்துப் போட்டு செய்யும் பவித்ரா மாதிரி நல்ல மருமகளை வேறு எங்கே பார்க்க முடியும்?” என்று கமலாவும் மருமகள் புகழ் பாடவும்,
“அடடா, அத்தையும் அண்ணனுமா சேர்ந்து என்னை மாட்டி விட்டுட்டீங்க... இன்னைக்கு நைட் எனக்கு டின்னு தான்...” என்றான் ரமேஷ் பயப்படுவதுப் போல நடித்துக் கொண்டே!
அவன் சொன்ன விதத்தில் அனைவரும் சிரித்தனர். பேசி சிரித்தப் படி சாப்பிட்டு முடித்து விட்டு, மற்றவர்கள் அனைவரும் ஹால் பக்கம் செல்ல, சமையலறையை சுத்தம் செய்ய பவித்ராவிற்கு உதவினாள் பாரதி.
“வேண்டாம் பாரு, இதெல்லாம் நானே பார்த்துப்பேன்... நீ போய் ரெஸ்ட் எடு... விவேக் கூட இரு, அவருக்கு போர் அடிக்கப் போகுது...” என்று சொல்லி தோழியை தடுத்தாள் பவித்ரா.