அபினவின் பேச்சில் இப்போது கூடுதல் உரிமை கலந்திருப்பது அஹல்யாவிற்கு கலக்கத்தைக் கொடுத்தது. அவனை தடுக்க அவள் எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பது அந்த கலக்கத்தை அதிகமாக்கியது.
“அஹல்யா!”
டீச்சர் என்ற அடைமொழியை விட்டு விட்டு அபினவ் கூப்பிடவும், மீண்டும் அதிர்ந்தாள் அஹல்யா.
“ஐ லவ் யூ அஹல்யா.”
அஹல்யா இதை இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்த்திருக்கவில்லை.
“என்ன பேசுறீங்கன்னு புரிஞ்சு பேசுறீங்களா? ஏதோ நல்லவர்ன்னு நாலு வார்த்தை பேசினா உடனே லவ் யூ ன்னு சொல்லிடுவீங்களா? யாரு என்னன்னு இல்லை? எனக்கு ஒரு பையன் இருக்கான்னு தெரியும்ல?” கடுகைப் போல படபடவென வெடித்தாள் அஹல்யா.
“என்னை நல்லவன்னு சொன்னதுக்கு தேங்க்ஸ் அஹல்யா. அப்படி நல்லவனா இருக்குறதால தான் இப்படி பட்டுன்னு போட்டு உடைச்சுட்டேன். என்னால மனசுக்குள்ளே ஒன்னை வச்சுட்டு வெளியே வேற மாதிரி பேச முடியாது. அருணோட அப்பாவை டைவர்ஸ் செஞ்சுட்டேன்னு நீங்க தானே என் கிட்ட சொன்னீங்க?”
அஹல்யாவுக்கு தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. ஆனாலும் என்ன எதற்கு என்றே புரியாமல் அழுகை வேறு வந்தது.
“இதுக்கு மேல என்கிட்டயோ, என் பையன் கிட்டேயோ வந்து பேசவே பேசாதீங்க,” என்றாள் அஹல்யா கோபத்துடனே!
“சீசர் கிட்ட?”