"எனக்கு தெரியும்..." என்றான் சஞ்சீவ் அவசரமாக.
இந்து கேள்வியாய் பார்க்கவும்,
"ராஜீவ் அதைப் பத்தி சொன்னான்... எனக்கு அன்னைக்கே கன்ஃபார்ம் ஆயிடுச்சு... நீ எனக்கு தான்... நடுவில யாராவது வந்தால் எப்படி... அது தான் நந்தினி ரூபத்தில வந்து உன்னை எனக்காக கடவுள் காப்பாத்தி கொடுத்திருக்கார்...." என்றான்.
அவன் சொன்ன விதம் அவளுக்கு இதமாக இருந்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்த சஞ்சீவ்,
"இந்து... என்னை இப்படி தவிக்க விடாமல் யெஸ்'ன்னு சொல்லிடு.... அன்னைக்கு அந்த கடையில ரஞ்சனியை பார்த்து கோவிச்சுட்டு நீ போனப் போது, எந்த உரிமையும் இல்லாமல் உன்னை தடுக்க முடியாமல் ரொம்ப திணறிப் போயிட்டேன்... இனி மேல் அப்படி இருக்க முடியாது... அதனால தான் என் மனசுல இருக்குறதை உடனடியா உன் கிட்ட சொல்லிட முடிவு செஞ்சேன்..." என்றான்.
அவன் கண்களை நேராக பார்த்த இந்து, அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்பதை உணர்ந்தாள். பின், அமைதியான குரலில்,
"சஞ்சீவ்... எனக்கும் உங்களைப் பிடிச்சு தான் இருக்கு... ஆனால் நாம நிறைய விஷயங்கள் யோசிக்க வேண்டி இருக்கு... என்னைப் பொறுத்த வரை, கல்யாணம் என்பது ரெண்டு பேர் மட்டும் சம்பந்தப் பட்ட விஷயம் இல்லை... ரெண்டு குடும்பம் சம்பந்தப் பட்ட விஷயம்... நிறைய பேர் காதலிச்சிட்டு அப்புறம் கல்யாணம்ன்னு வரும் போது தான் மத்த பிரச்சனை பத்தி யோசிப்பாங்க... நாம கொஞ்சம் முன்னாடியே யோசிக்கலாம்...." என்றாள்.
"நீ எங்க அம்மாவை பத்தி யோசிக்குறேன்னு நினைக்கிறேன்... எனக்கு உன்னை விட யாரும் முக்கியம் இல்லை இந்து... எங்க அம்மாக்கு அண்ணன் இருக்கான்... நீ ஒரு வார்த்தை சொன்னால், நான் எல்லாத்தையும் விட்டுட்டு வந்திருவேன்...."