சென்றாள்.
அவளின் மனம் பரபரத்துக் கொண்டே இருந்தது. உடலில் இது வரை அறிந்திராத புளங்காகிதம், மனதில் ஒரு உல்லாசம்... முகத்தில் புன்னகையோடு வீட்டின் உள்ளே சென்றவள், கனகாவை பார்த்து அதே புன்சிரிப்போடு,
"அம்மா எங்கே?" என்று கேட்டாள்.
"உள்ளே தான் இருக்காங்க சின்னம்மா..." என்று கனகா சொல்லவும்,
"சாப்பிட்டாங்களா?" என அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
"இல்லை... உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க..."
சரி என தலை அசைத்து விட்டு, அங்கிருந்து நகர்ந்தவள், நேராக அர்ச்சனாவின் அறைக்கு சென்றாள். ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்த அர்ச்சனாவின் முகம் மகளை கண்டவுடன் தானாக மலர்ந்தது.
"வாடா செல்லக்குட்டி..."
"என்னம்மா இது... நான் என்ன சின்னக் குழந்தையா... இப்படி என்னை குட்டின்னு கூப்பிட..." செல்லமாக சிணுங்கியபடி, அம்மாவின் அருகே சென்று அமர்ந்தாள் இந்து.
"நீ என்னைக்கும் எனக்கு சின்ன பாப்பா தான்...." என்றபடி மகளின் தலையை அன்புடன் வருடிய அர்ச்சனா, அவளின் முகத்தை பார்த்து விட்டு ஏதோ தோன்றவும்,
"என்னடா, ஏதோ சொல்ல வந்த போல இருக்கே..." என்றார்.
"ம்ம்ம்... ஆமாம் அம்மா, சொல்ல தான் வந்தேன். அதுக்கு முன்னாடி உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கனும்... சரி, அதெல்லாம் அப்புறம்... முதல்ல வாங்க போய் சாப்பிடலாம்..."