தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 44 - பிந்து வினோத்
44. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
மாமியாரின் சொல்லை தட்டாமல் பாரதியின் அருகில் அமர்ந்தாள் உமா. ஒரு சில வினாடிகள் அமைதியாக இருந்த கற்பகம், பாரதியை பார்த்து, சுற்றி வளைக்காமல்,
“இன்னைக்கு, உன்னைப் பத்தி ஒரு விஷயம் கேள்வி பட்டேன் பாரதி,” என்றாள்.
“என்ன அத்தை?” என்றாள் பாரதி யோசனையுடன்! கற்பகம் அவளை தனியாக அழைப்பதும், இப்படி பேசுவதும், அவளுள் சில பல கேள்விகளை உருவாக்கி இருந்தது...
சின்ன மருமகளின் முகத்தில் பார்வையை செலுத்தியபடி, குரலில் சற்றே ஏளனம் இழையோட,
“உன்னோட காலேஜ் டேஸில் நீ யாரையோ லவ் செய்தீயாமே?” எனக் கேட்டாள் கற்பகம்.
என்னவாக இருக்கும் என எதை எதையோ யோசித்திருந்த பாரதி, இதை எதிர்பார்க்கவில்லை!!!! கற்பகம் உமாவையும் அறையில் இருக்க சொல்லி இருந்ததால் பாலா விஷயமாக இருக்காது என்று தான் நினைத்திருந்தாள்...
என்ன தான் உமா மிகவும் நல்லவள் என்றாலும், இந்த விஷயத்தை கற்பகம் தன்னிடம் தனியாக பேசி இருந்திருக்கலாம் என்ற எண்ணம் பாரதியின் மனதில் எழுந்தது.
இப்படி கற்பகம் கேள்வியை கேட்ட இடம் காரணமாக தான் பாரதியின் மனம் வருந்தியதே தவிர, கேட்கப்பட்ட விஷயம் அவளை பெரிதும் பாதிக்கவில்லை. அவள் மனது தான் காயப் பட்டு, காயப் பட்டு காய்த்து போயிருந்ததே! இது போல் எத்தனை கேள்விகள், கேலி பேச்சுக்கள் எல்லாம் அவள் கேட்டிருக்கிறாள்.
மனதில் எண்ணங்கள் ஒன்றாக அலை மோத, கற்பகத்தை அமைதியாக பார்த்தாள் அவள்... பின்,
“ஆமாம் அத்தை, அது நிஜம் தான்... ஆனால் அவன் அவ்வளவு நல்லவனில்லை... அது தான்...” என்றாள் அமைதியாக.