“இல்லை இன்ஸ்பெக்டர். அப்படி எல்லாம் எதுவுமில்லை,” என மறுத்தாள் அஹல்யா.
“அஹல்யா, என்னால உங்க இடத்துல இருந்து பார்த்து புரிஞ்சுக்க முடியுது. நீங்க ப்ளான் செய்து கொலை செய்யலை. உங்களையும் அறியாம நடந்திருச்சு. அதும் அந்த சேகரன் உங்களை எப்படி டார்ச்சர் செய்துட்டு இருந்தான்னு எனக்கும் தெரியும்.” தென்றல்வாணன் இப்போது குரலை மீண்டும் அமைதியாக்கி சொன்னான்.
“சார், இது எல்லாம் பொய். தப்பு. இப்படி எதுவும் நடக்கலை. என்னை நம்புங்க.” அஹல்யா பயத்துடன் சொன்னாள்.
“இங்கே பாரும்மா. இன்ஸ்பெக்டர் சொல்றதை வச்சுப் பார்த்தா ஏதோ தெரியாம செய்துட்டேன்னு தான் தோணுது. உண்மையை ஒத்துக்கிட்டா சின்ன தண்டனையா முடிஞ்சுப் போயிடும். உண்மையை சொல்லிடு.” அதுவரைக்கும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த பெண் போலீஸ் ஒருத்தி அஹல்யாவிற்கு அட்வைஸ் வழங்கினாள்.
“இல்லை, நான் அவனை அன்னைக்கு பார்க்கவே இல்லை,” என்றாள் அஹல்யா அழாத குறையாக.
“இங்கே பாருங்க அஹல்யா, சேகரன் உங்க கிட்ட தப்பா நடந்திருக்கலாம். ஆனால் மத்தபடி சேகரன் யார் கிட்டேயும் தப்பா நடந்ததில்லைன்னு எங்க விசாரணையில இருக்கு. காதல், கல்யாணம், பொண்ணுங்கன்னு வேற எதுவுமே அவனுக்கு இல்லை. கிடைக்குற வேலை எதையாவது செய்றது, குடிச்சுட்டு அதை செலவழிக்குறதுன்னு, நாளை கடத்திட்டு இருந்தவன் அவன். அவன் சாகனும்னு நினைக்குற அளவுக்கு உங்களை தவிர வேற எதிரி அவனுக்கு யாருமே கிடையாது.”
“அப்போ அது விபத்தா இருக்கும் இன்ஸ்பெக்டர். எனக்கு எதுவும் தெரியாது!”
“அஹல்யா, என் பொறுமையை ரொம்ப சோதிக்குறீங்க. உங்களுக்காக தான் பொறுமையா பேசிட்டு இருக்கேன். உண்மையை சொல்றது உங்களுக்கு நல்லது!”