மாணவர்களும் முழு மூச்சுடன் படிக்க இறங்கினார்கள், தாளாளருக்கு மட்டும் நடப்பது அனைத்தும் விந்தையாகவே தெரிந்தது, தான் ஒண்ணு நினைக்க அது ஒண்ணு நடக்கிறதே என நினைத்தான், கண்ணகியும் மாதவியின் பேச்சைக் கேட்டு அமைதியாக இருந்தாள் அவளது வேலையை அவள் செய்தாள், மாணவர்களும் படிக்கலானார்கள்.
அப்படியே நாட்கள் ஓடியது ஒரு மாதம் கடந்தது
இந்த ஒரு மாதத்தில் சனி ஞாயிறு தினங்களில் கூட கல்லூரி நடந்தது, இப்படி காலேஜ் நடப்பது ஊருக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது, சிலர் கல்லூரியை பற்றி நல்லவிதமாகவும் சிலர் அவதூறாகவும் பேசி வைத்தார்கள், இச்செய்திகள் அனைத்தும் ஈஸ்வரமூர்த்தியின் காதில் விழுந்தது, அதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை
இந்த ஒரு மாதத்தில் கோவலனின் நடவடிக்கையில் நல்ல மாற்றம் தெரிவதை கவனித்தார், அதற்கு காரணம் கண்ணகி என நினைத்தார் அவள் வந்த நேரம் கோவலன் மாறுவதாக நினைத்தார், ஆனால் உண்மையில் மாதவியால்தான் கோவலனின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. அதை அவனே உணர்ந்து வியப்பும் அடைந்தான்.
ஒரு மாதம் கழிந்த நிலையில் கண்ணகி மாதவியிடம்
”காலேஜ் இப்ப நல்லபடியா இருக்கு மாதவி, எப்படியிருந்த காலேஜ் இப்ப ஒழுக்கமா நடக்குது மாணவர்களும் சின்சியரா படிக்க வராங்க, எனக்கே இது ஆச்சர்யமா இருக்கு மாதவி, என்னால இப்படி ஒரு காலேஜ் மாறியிருக்குன்னு நினைக்கறப்ப எனக்கு என்மேலயே பெருமையா இருக்கு”
“பெருமையோட நிறுத்திக்க கர்வம் வராம பார்த்துக்க“
”என்ன சொல்ற மாதவி”
”ஆமாம் என்னாலதான் இந்த காலேஜ் இப்படி மாறி நல்லவிதமா ஆகியிருக்குன்னு நினைச்சி உனக்கு திமிரு வந்துடப் போகுது”