விபத்தாகி என் கண்ணு முன்னாடியே என் அப்பா அம்மா இறந்துட்டாங்க தப்பு என்னோடதுதான் தெரிஞ்சே நான் இதை செய்யலை”
“உன்னால உன் அப்பா அம்மா மட்டுமில்லை கண்ணகியோட அப்பா அம்மாவும்தான் இறந்தாங்க” என சொல்ல அவனோ அதிர்ந்தான்
”என்ன தாத்தா சொல்றீங்க”
”ஆமாம் உன்னால கார் விபத்தானதே எப்படி ஆனது எதிரே வந்த கார்ல மோதினதே அந்த கார்ல இருந்தது யாரோ இல்லை, கண்ணகியோட அப்பா அம்மாதான்” என சொல்ல கோவலனுக்கு உலகமே இருண்டது.
”கொலைகாரன்டா நீ, பாவம் கண்ணகியை நான் ஏன் பத்திரமா பார்த்துக்க சொன்னேன்னு இப்பவாச்சும் புரியுதா, நீ செஞ்ச பாவத்துக்கு புண்ணியம் தேடிப்பன்னுதான் உன்கிட்ட கண்ணகியை ஒப்படைச்சேன் ஆனா நீ அவளுக்கே பழி பாவம் கொண்டு வந்து கொடுத்துட்ட, இப்ப உனக்கு சந்தோஷமா இருக்குமே, சே உன்னைப் பார்க்கவே எனக்கு பிடிக்கலை இனி என் முகத்தில விழிக்காத போ, எங்கயாவது போ என் வீட்ல இருக்காத போ” என கத்திவிட்டு அவர் வருத்தமுடன் தன் அறைக்குச் செல்ல இடி விழுந்தது போல தொய்வுடன் அமர்ந்து விட்டான் கோவலன்.
அவனுக்கு பழைய நினைவுகள் கண் முன்னே வந்தது, தன் தாய் தந்தை மறைவுக்கு காரணமாக இருந்த அந்த கார் விபத்து அவனுக்கு தெரிந்தது, அன்றைய சம்பவத்தில் தான் எவ்வளவு பெரிய தவறு இழைத்துவிட்டோம் தானும் அநாதையாகி பாவம் கண்ணகியையும் அநாதையாக்கி விட்டோமே நான் பாவி நான் பாவி என தன்னையே வெறுத்து கோபித்துக் கொண்டான்.
மறுநாள் பொழுது விடிந்தது.
ஈஸ்வரமூர்த்தியே ரெடியாகி கல்லூரிக்குச் செல்ல கிளம்பினார் அந்நேரம் குறுக்கே வந்தான் கோவலன்