வினாயக் கோபத்தோடு எழுந்து நின்றான்.
“நீங்க சொல்றது சரி தான் சார். இதுக்கு மேல இங்கே வேலை செய்ற ஐடியா எனக்கும் இல்லை. என் டிசைன், என் ஃபைல்ஸ் எல்லாம் எடுத்துட்டு நான் இன்னைக்கே கிளம்புறேன்!”
“நீ கிளம்புறேன்னா கிளம்பு! ஆனால், உன்னோட டிசைன்ஸ் எல்லாம் நீ இந்த கம்பெனிக்காக செய்தது. அதெல்லாம் கம்பெனிக்கு சொந்தம்.”
“இது வரைக்கும் நான் முடிச்ச ரிசெர்ச் எல்லாம் உங்களுக்கு சொந்தம் சார். உங்க பிலாசபி படி ப்ராடக்ட் ஆன அப்புறம் தான் எதுக்கும் மதிப்பு இருக்கு. இந்த சைபோர்க் என்னோட கனவு. அதோட மதிப்பு தெரியாத உங்க கிட்ட என்னால அதை விட்டுட்டுப் போக முடியாது!”
“உனக்கு சம்பளம் கொடுத்து வேலை செய்ய வச்சிருந்தவன் நான். நீ வெறும் வேலைக்காரன் மட்டும். கம்பெனி வேலையை விட்டுட்டுப் போறீயா, போ. வெறும் கையோட போ. எதையும் எடுத்துட்டுப் போகாதே!”
“திரும்பவும் சொல்றேன் என் சைபோர்க் டிசைன் மட்டு தான் எடுத்துட்டுப் போறேன். என்னோட மத்த 63 பேட்டன்ட், கண்டுப்பிடிப்பு எல்லாமே உங்களுக்கு தான் சொந்தம்!”
“இதுவும் எங்களுக்கு தான் சொந்தம். நீ என் பேச்சை மீறி போனா கம்பெனி ரகசியத்தை திருடுனதா கேஸ் போடுவேன்!”
“போடுங்க சார். என் அட்ரஸ் உங்களுக்கே தெரியும்.” வினாயக் அதற்கு மேல் அங்கே இருக்கவில்லை. விடு விடு என நடந்து சென்று மறைந்தான்.
நடப்பதை கவலையுடன் கவனித்துக் கொண்டிருந்த ப்ரியம்வதா வினாயக்கிற்காக வருத்தப் பட்டாள். சந்திரமௌலி பற்றி அவளுக்கு தெரியும். அவருக்கு எல்லாமே பண வடிவில் இருந்தால் தான் கண்ணுக்குத் தெரியும். வினாயக் போன்ற அறிவாளியை, உழைப்பாளியை மதிக்கும் அளவிற்கு அவருக்கு அறிவு கிடையாது. ஆனால் சொன்னதுப் போல செய்யக் கூடியவர் தான். பணம் படைத்தவரின் கோபத்தை வினாயக்கால் தாங்க முடியுமா?