“அந்த பைத்தியம் போனா போகட்டும். நாம மத்த விஷயங்களை பேசுவோம்.” சந்திரமௌலி ஒன்றுமே நடக்காததுப் போல மற்றவர்களிடம் பேசினார்.
🌼🌸❀✿🌷
ப்ரியம்வதா அன்றைய வேலை மும்முரத்தில் இருந்தாள். அவள் மொபைலில் வினாயக்கிடம் இருந்து அழைப்பு வந்தது. உடனடியாக அழைப்பை ஏற்றாள்!
“ப்ரியம்வதா, பிஸியா இருக்கீயா? டென் மினிட்ஸ் இருக்குமா?” வினாயக்கின் குரலில் இருந்து அவளால் எதையும் புரிந்துக் கொள்ள முடியவில்லை!
“சொல்லு வினாயக்,” என்றாள் யோசனையுடன்!
“நீ ஆஃபீஸ் வெளியே வர முடியுமா? நான் அங்கே தான் இருக்கேன்!”
“இப்போவே வரேன்!”
சொன்னதுப் போலவே ப்ரியம்வதா உடனடியாக அலுவலக கட்டிடத்தை விட்டு வெளியே வந்தாள்.
“இங்கே இருக்கேன் ப்ரியம்வதா!” வினாயக் சாலையோர மரத்தில் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தான்.
“எத்தனை தடவை ஃபோன் செய்தேன் வினாயக். எதுக்கு நீ எடுக்கவே இல்லை?” ப்ரியம்வதா மனதில் இருந்த வருத்தத்தை மறைக்க முயற்சி செய்துக் கொண்டே கேட்டாள்!
“என்னோட மீதி டிசைன் எல்லாத்தையும் பத்திரப் படுத்தி வச்சுட்டு இருந்தேன் ப்ரியம்வதா! அதான் உன் கிட்ட பேச முடியலை. சாரி," என்றான் வினாயக்!